Skip to main content

‘அரசின் வேளாண் திட்டங்களை கூறுவதில் வேளாண் அலுவலர்கள் சுணக்கம்..’ அமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

‘Agriculture officials are reluctant to state the government’s agricultural plans ..’ Minister demands action

 

தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வேளாண்துறைக்குத் தனி பட்ஜட், விவசாயிகளுக்கு விலையில்லா இடுபொருட்கள், ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் கிடைக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பல்வேறு திட்டங்களை அறிவித்துவருகிறது. கடந்த ஆட்சியைவிட தற்போது நடைபெறும் ஆட்சியில் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் செயல்படுவதாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துவருகிறார்கள்.

 

அதேநேரத்தில் வேளாண் அலுவலர்கள் அரசு அறிவிக்கும் திட்டங்கள், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் உள்ளிட்ட எந்தத் தகவலையும் உண்மையான விவசாயிகளுக்குத் தெரிவிப்பது இல்லை. ஊருக்கு நான்கு பேரை தரகர்கள் போல் வைத்துக் கொண்டு அவர்களிடமே அனைத்தையும் கூறுகிறார்கள். இதனால் உண்மையான விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கற்பனைச்செல்வம் கூறுகையில், “கிள்ளை என்பது காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாக உள்ளது. இதன் சுற்றுவட்ட பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் ஒரு போக சாகுபடி செய்துவருகிறார்கள். சில இடங்களில் இருபோக சாகுபடியும் நடைபெறுகிறது. பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள வேளாண் அலுவலர்கள், விவசாயிகளுக்கு அரசின் வேளாண் திட்ட செயல்பாடுகள்; அதனால் விவசாயிகளுக்கு எவ்வாறு பயன் ஏற்படுகிறது; சூழலுக்கு ஏற்ற, என்ன பயிர் நடவு செய்யலாம்; தோட்டக்கலை மூலம் என்ன பயன்கள் உள்ளன என எதையும் விவசாயிகளிடம் தெரிவிப்பது இல்லை. விவசாயிகள் கூட்டம் நடத்தினால், உண்மையான விவசாயிகளுக்குத் தகவல் சொல்வது இல்லை. கூட்டத்தில் அவர்கள் கொடுக்கும் டீ, பிஸ்கட்டை சாப்பிட்டு எந்தக் கேள்வியும் கேட்காதவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். இதுகுறித்து பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநருக்குப் புகார் கூறலாம் என அவரை தொடர்புகொண்டால் அவர் விவசாயி என்றாலே ஏதோ கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் போல் அவரது பேச்சு அலட்சியமாகவே உள்ளது. அரசு, விவசாயிகளைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தாலும் கீழ்மட்ட விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் வேளாண் அலுவலர்கள் சுணக்கமாக செயல்படுவது விவசாய துறையை இவர்கள் கீழ்மட்டத்திற்கு கொண்டு செல்வார்களோ? என்ற அச்சம் உள்ளது” என்று தெரிவிக்கிறார்.


கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கத்தலைவர் கண்ணன் கூறுகையில், “ஒரு ஒன்றியத்திற்கு தலா ரூ. 1000 கட்டிவிட்டு 100 விவசாயிகள் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். இது விவசாயக் குழு என்று அழைக்கப்படுகிறது. இவர்களில் 15 பேர் இயக்குநர்கள் என்றும் தலைவர், செயலாளர், பொருளாளர் என்றும் மூன்று பேர் இருப்பார்கள். அரசு அந்தப் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்குத் தேவையான நெல் அறுவடை இயந்திரம், உழவு ஓட்டும் இயந்திரம், களையெடுக்கும் கருவி உள்ளிட்ட விவசாய வேலைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் இவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். இதனை இவர்கள் வைத்துக்கொண்டு மற்ற விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்களுக்கும் பயன்பாட்டுக்கு கொடுப்பது இல்லை. இதனால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாய பொறியியல் துறையில் ஏற்கனவே பயன்படுத்தியவர்களுக்கே விவசாய இயந்திரம் மற்றும் கருவிகள் கொடுக்கப்படுகிறது. தோட்டக்கலை மற்றும் திட்டங்கள் குறித்து விவசாயி ஆலோசனை கூட்டங்கள் சம்பிரதாயத்திற்கே நடத்துகிறார்கள்” எனும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

 

மேலும் “விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது இல்லை. யாரோ பத்து பேரை வைத்து கூட்டத்தை நடத்திவிட்டு விவசாயிகளுக்கு அனைத்து விவரத்தையும் கூறிவிட்டதாக பதிவு செய்து விடுகிறார்கள். அரசின் வேளாண்திட்டங்கள், விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என கேட்கும் விவசாயிகளுக்கு விவசாய கூட்டத்திற்குத் தகவல் அளிப்பது இல்லை. விவசாயிகள் என்ற போர்வையில் புரோக்கர்கள் போல் சிலரை வைத்துள்ளனர். அவர்களிடத்தில் சில தகவல்களை கூறிவிட்டு அனைவரிடத்திலும் கூறியதாக முடித்துகொள்கிறார்கள். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள வேளாண் அலுவலர்கள் செய்யும் தவறுகளை மேல் அதிகாரியிடம் தெரிவிக்கலாம் என்று பரங்கிப்பேட்டை மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய வேளாண் உதவி இயக்குநராக உள்ள சித்ராவை தொடர்புகொண்டால் அவர் ஃபோனை எடுப்பதில்லை. நேரில் சந்தித்து விவசாயிகளுக்கு ஏற்படும் குறைகளைக் கூறினாலும் அலட்சியமாகவே நடந்துகொள்கிறார். வேளாண்துறை அமைச்சர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் இருக்கும் மாவட்டத்திலே இதுபோன்று வேளாண் அலுவலர்கள் நடந்துகொள்வது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை அலட்சியப்படுத்தும் வேளாண் அலுவலர் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது” என்றார்.

 

இதுகுறித்து விபரம் அறிய பரங்கிப்பேட்டை மற்றும் கீரப்பாளையம் ஒன்றியத்தின் வேளாண் உதவி இயக்குநராக உள்ள சித்ராவை தொடர்பு கொண்டோம், “நான் எல்லாவற்றுக்கும் பதில் கூறுகிறேன், தற்போது முக்கிய தொலைபேசி வருகிறது. பிறகு அழைக்கிறேன்” என தொடர்பை துண்டித்தவர் பல மணி நேரமாகியும் பதில் அளிக்கவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.