பா.ஜ.க. முதல்வர் யோகி ஆதித்தியநாத் தலைமையில் ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டும், அங்கு தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலை சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் பதவி விலகக்கோரியும், வேளாண்மை புதிய மசோதா சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதிப்பு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 12.10.20 அன்று ஈரோடு காளைமாடு சிலை அருகே ஆதி தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொது செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
அதேபோல் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பெண்கள் மாவட்ட அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட இளைஞர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும் அரசு நேரடியாக தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவி மகேஸ்வரி தலைமை தாங்கினார். செயலாளர் அருள்மணி மற்றும் செல்ல லட்சுமி, திலகவதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். மக்கள் அமைதியாக இருந்தாலும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல் அவர்களை போராட்டத்தில் குதிக்க வைத்து வருகிறது.