
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்ததற்கு வரிசெலுத்த வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுழைவு வரி செலுத்தவில்லை எனவும், பதிவு செய்யவில்ல எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே காருக்கு நடிகர் விஜய் நுழைவு வரி செலுத்த வேண்டும் என வணிக வரித்துறை ஆணையர் சார்பில் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் காரைப் பதிவு செய்யாததால் காரைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இரண்டு வாரத்தில் தமிழ்நாடு முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு இந்த அபராத தொகையை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சமூகநீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோவாக இருக்க கூடாது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.