Skip to main content

திருமயம் அருகே விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி- 5 பேர் கவலைக்கிடம்

Published on 06/01/2019 | Edited on 06/01/2019
a

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற சுற்றுலா  வேனும், கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

a

 

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 15 பேர், ஐய்யப்ன் கோயிலுக்கு சென்று ஊருக்கு திரும்பும் வழியில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த பிறகு தெலுங்கானாவுக்கு புதுக்கோட்டை வழியாக சுற்றுலா  வேனில் திரும்பி கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், வேன் மீது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதியது. 

a


இந்த கோர விபத்தில் சம்பவத்தில் வேன் டிரைவர் மற்றும் தெலுங்கானா நாசபூர் மாவட்டம், காதிபேட், மெதக் பகுதியை சேர்ந்த நாகராஜ் (35), மகேஷ் (28), குமார் (22), ஷாம், பிரவின், கிருஷ்ணா, சாய், ஆஞ்சநேயலு, சுரேஷ் ஆகிய 10 பேர் சம்பவ இடத்திலும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். மேலும் அந்த வேனில் சென்ற 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை திருமயம் அரசு மருத்துவமனையில்  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மீட்பு படையினர் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

 

    தேசிய நெடுஞ்சாலையான பிறகு திருமயம் பகுதியில் இதே போல அடிக்கடி விபத்துகள் நடப்பதால் விபத்துகளை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். 
            
 

சார்ந்த செய்திகள்

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தொடர் விபத்து; திடீரென சாலையில் கவிழ்ந்த லாரி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 truck overturned on the Thiruvananthapuram National Highway

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான கனிம வளங்களை அதிக பாரத்தோடு கேரளாவுக்கு கடத்திச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில், கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, கனிம வள கொள்ளையை தடுக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கனிம வள கொள்ளையில் ஈடுபடும் லாரிகள், இதே பகுதியில் விபத்துகளிலும் அடிக்கடி சிக்கிக்க் கொள்கின்றன. இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடக்காமலிருக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம் பெற்றது. இதனால், நாகர்கோவில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் விரிவுப்படுத்தும் பணி தொடங்கியது. அதே சமயம் இந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க சாலைகளில் பல இடங்களில் கான்கிரீட் கட்டைகளால் ஆன சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இது அமைக்கப்பட்ட பிறகு விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட பிறகுதான் தற்போது இந்தப் பகுதியில் அதிகமாக விபத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதில் கடந்த 10 நாட்களில் மட்டுமே சுமார் 6க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது. மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி லோடு ஏதும் இல்லாமல் டாரஸ் லாரி ஒன்று சென்றுள்ளது.

அப்போது, அந்த டாரஸ் லாரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு வேகமாகச் சென்ற அந்த டாரஸ் லாரியை, வெள்ளிக்கோடு பகுதியில் உள்ள வளைவில் ஓட்டுனநர் திருப்ப முயன்றுள்ளார். ஆனால், சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த டிவைடர் சிமெண்ட் கட்டையில் என மோதியுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் அந்த லாரியை அங்கேயே நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது டாரஸ் லாரியை நிறுத்த ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, அந்த லாரி வேகமாக புரண்டு பெரும் சத்தத்துடன் பொத்தென்று கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.