Skip to main content

வேளச்சேரி 92வது வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு தொடக்கம்..! (படங்கள்)

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

 

 

தமிழகத்தில் 06.04.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நிறைவடைந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அப்போது வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டியில் தூக்கிச் சென்ற நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் பழுதடைந்த வாக்கு இயந்திரங்கள் எனத் தேர்தல் ஆணையம் சார்பில், முதலில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

பின்னர் நடந்த தீவிர விசாரணையில், அந்த இயந்திரம் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் செயல்பாட்டில் இருந்ததும், அதில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. அதனால் வேளச்சேரி தொகுதியில் அந்த 92வது வாக்குச்சாவடியில் மட்டும் ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு அந்த 92வது வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு துவங்கியது. அப்பகுதியினரும் ஆர்வமாக காலை முதலே வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர். முன்னதாக சென்னை தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி கமிஷ்னருமான பிரகாஷ் தேர்தல் நடைபெறும் பூத்தில் ஆய்வுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” - விஷால் கணிப்பு

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vishal about 2024 and 2026 election, his political party, and vijay tvk entry

விஷால் புது அரசியல் கட்சி தொடங்குவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்து, “வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட விஷால், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரது இயக்கம் குறித்த கேள்விக்கு, “நற்பணி இயக்கம், குறிப்பிட்ட நாட்கள், பண்டிகை நாட்கள் மட்டும் இல்லாமல் எல்லா நாட்களிலும் செயல்படும். எங்கே பிரச்சனைகள் வந்தாலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்கு சொல்லிவிடுவார்கள். உடனே நாங்கள் சரி செய்வோம். படப்பிடிப்பிற்கு போகும் போது, அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். அங்கு சின்ன சின்ன அடிப்படை வசதி கூட இல்லாமல் இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. அதனால் உதவிகளைப் பூர்த்தி செய்தால் மனசு சந்தோஷமாக இருக்கும். அந்த வகையில் நற்பணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருப்போம்” என்றார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “உண்மையிலேயே ஒரு ரசிகனா, தமிழ்நாட்டில் இருக்கும் குடிமகனா அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதே என்னுடைய கட்சி பெயர் என்ன, அவருடன் கூட்டணியா, என்பதெல்லாம் தேவையில்லை. என்னை பொறுத்தவரையில் மக்கள் சேவை செய்ய இத்தனை கட்சி தேவையில்லை. எல்லாருக்குமே ஒரே குறிக்கோள் தான். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தான். அதற்கு இப்போது இருக்கிற கட்சிகளே அதிகம். அதைத் தாண்டி ஒருவர் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் என்றால், அவருடைய நம்பிக்கையில் தான் வருகிறார்” என்றார்.

மேலும், “அரசியல் என்பது பொதுப்பணி மற்றும் சமூக சேவை. அது ஒரு துறை கிடையாது. பொழுதுபோக்கிற்காக வந்துட்டு போகிற இடமும் கிடையாது. எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்திருப்போம். அந்த வகையில் அனைவரும் அரசியல்வாதி தான். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்வது, அல்லது வரப்போறன்னு சொல்லிட்டு வராமல் இருப்பது...அப்படி எதுவும் இல்லை. அந்தந்த நேரத்தில், அதற்கான காலகட்டத்தில் முடிவெடுக்கப்படும். நடிகர் சங்கத்தில் நான் பொதுச்செயலாளராக ஆவேன் என எனக்கே தெரியாது. ஒரு நடிகனாக 2004ல் இருந்து செயல்பட்டு வருகிறேன். எனக்கு கார்டு கொடுத்த ராதாரவி அண்ணனை எதிர்த்து நிற்பேன் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. அதே போல் தான் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும். அதனால் எல்லாமே அந்த காலம் எடுக்கக் கூடிய முடிவு தான்” என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, “கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். நான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை நேரம் வந்தால் சொல்லுவேன். இதற்கு முன்னாடி ஒரு முறை கேப்டன் அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டேன் என சொல்லியிருக்கிறேன். அதில் ஒளிவு மறைவு ஒன்னும் கிடையாது. சொன்னாலும் ஜெயிலில் பிடித்து போடமாட்டார்கள்” என்றார். 2026 தேர்தல் குறித்த கேள்விக்கு, “என்னுடைய கணிப்பின்படி 2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” என்றார்

Next Story

வேளச்சேரி விபத்து; கட்டுமானப் பணி மேற்பார்வையாளர்கள் கைது

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Construction supervisors arrested due to Velachery container accident

சென்னை கிண்டி 5 பார்லாங் சாலை - வேளச்சேரி சாலை இணைப்பில் கட்டுமான வேலைக்காக தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 50 அடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்தக் கட்டுமான பணிகளில் ஈடுபடுவர்கள் தங்கிக் கொள்ள வசதியாக ஒரு கண்டெய்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஊழியர்கள் தங்கி பணிகளையும் மேற்கொண்டுவந்தனர்.

கடந்த 3ம் தேதி முதல் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய துவங்கியது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் மழை நீர் அதிகம் தங்கும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியது. அதேபோல், அதி கன மழை பொழிவு இருக்கும் என்பதால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அந்தக் கட்டுமான பணிகளின் பணிதள பொறியாளர் ஜெயசீலன் என்பவர் அங்கு சென்றிருந்தார். இவர் 4ம் தேதி அதிகாலை நேரத்தில் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த 50 அடி பள்ளத்தில் நீர் முழுவதுமாக தேங்கி இருந்தது. தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாக திடீரென அந்த ராட்சத பள்ளத்தின் பக்கவாட்டில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கண்டெய்னரும் அந்த பள்ளத்தில் விழுந்தது. அந்தக் கண்டெய்னரில் பொறியாளர் ஜெயசீலன், அருகே அமைந்திருக்கும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிவந்த நரேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். மேலும், அவர்களுடன் மூவர் அங்கு இருந்துள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் அந்த 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக மூவரை மீட்டனர்.

இதில், ஜெயசீலன் மற்றும் நரேஷ் ஆகிய இருவரையும் மீட்பு படையினரும், தீயணைப்பு வீரர்களும்  தொடர்ந்து நான்கு நாட்களாக மீட்பதற்கு போராடி வந்தநிலையில், இன்று காலை நரேஷ் என்பவரை பிணமாக மீட்டனர். தற்போது அந்த பள்ளத்தில் இருந்த மொத்த நீரும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மண்ணில் புதைந்திருந்த கண்டெய்னரை மீட்ட மீட்பு படையினர், அதில் இருந்து ஜெயசீலனை பிணமாக மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த பொறியாளர் ஜெயசீலனுக்கு 11 மாதங்கள் முன்பு திருமணம் முடிந்து, தற்போது அவரது மனைவி ஒன்றரை மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கட்டுமான மேற்பார்வையாளர்கள் எழில், சந்தோஷ், ஆகிய இருவரையும் வேளச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மழைக் காலங்களில் வேலையை நிறுத்தாமல், வேலை ஆட்களை அங்கே ஏன் இருக்க வைத்தீர்கள் என்று இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.