Skip to main content

திருச்சியில் அடுத்தடுத்த சம்பவங்கள்; கல்லூரி மாணவி, கர்ப்பிணி உட்பட 6 பேர் மாயம்!

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

6 people have gone missing consecutively in Trichy

 

திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த மகாமுனி என்பவரது மகள் நந்தினி (வயது 18). இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.  நேற்று முன்தினம் நந்தினி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், நந்தினி அவரது தாயார் மாலதிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற வாலிபரை தான் திருமணம் செய்ததாகவும், இனிமேல் தன்னைத் தேடவேண்டாம் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், மாலதி  போலீசில் புகார் செய்ததன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

திருச்சி கே.கே நகர் பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் மாயமானார். திருச்சி பர்மா காலனி கவிபாரதி நகர் பகுதியைச் சேர்ந்த காட்டுராஜா என்பவரது மகள் தமிழ்ச்செல்வி(18). இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். காங்கேயத்தில் தங்கி இருந்த அவர் கடந்த 28 ஆம் தேதி திருச்சிக்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறிச் சென்றார். ஆனால், திருச்சிக்கு அவர் வந்தடையவில்லை. இது குறித்து தாயார் புஷ்பம் கே.கே நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் ஒரு இளம்பெண் மாயமானார். ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் அபிநயா. இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் வீட்டிலிருந்து அபிநயா திடீரென மாயமானார். இது குறித்து அவரது தாயார் வைஜெயந்தி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அபிநயாவை தேடி வருகின்றனர்.

 

திருச்சி தில்லை நகரில் ஒரு சிறுமி மாயமானார். திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெரு எழில் நகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மனைவி பானு என்கிற சமீம் பானு மாயமாகியுள்ளார். இவர் சமீப காலமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகி விட்டார்.

 

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் மாயமாகியுள்ளார். பாலக்கரை ஆழ்வார் தோப்பு முருகன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா. அவரது மனைவி மகபூநிஷா. இந்த தம்பதிகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது நான்கு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் மகபூநிஷா அருகிலுள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருச்சியில் இப்படி அடுத்தடுத்து காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் நிலையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்