Skip to main content

பட்டா மாற்ற 40 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக விஏஓ கைது

Published on 12/01/2024 | Edited on 12/01/2024

   

40 thousand bribe to change belt; VAO arrested red-handed

 
கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே உள்ளது கீழ் அழிஞ்சி பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனு. இவர் தன் பெயருக்கு கிரையம் பெற்ற இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை உட்பிரிவு செய்து தன்  பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு வட்டாட்சியருக்கு இணைய வழியில் முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.

சீனு தனது நிலம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அவர்களை சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர் நீங்கள் இணைய வழியில் மனு செய்துவிட்டால் உடனே நாங்கள் பட்டா மாற்றி கொடுத்து விடுவோமா? அது எப்படி நடக்கும் நீங்கள் கொடுக்க வேண்டியதை எங்களுக்கு கொடுத்தால் தானே பட்ட மாற்றம் செய்ய முடியும் என்று பேரம் பேசி உள்ளார். பேரத்தின் முடிவில் பட்டா மாற்றம் செய்ய 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அவரிடம் பணம் ஏற்பாடு செய்துவிட்டு வருவதாக கூறிவிட்டு புறப்பட்ட சீனு 'நமக்கு சொந்தமான நிலத்தை நம் பெயருக்கு பட்டா மாற்றிக் கொடுக்க 40 ஆயிரம் லஞ்சமா... இது என்ன கொடுமை' என்று வேதனையின் உச்சத்திற்கு சென்றார்.

இதற்கு ஒரு முடிவுகட்ட முடிவு செய்தார். அந்த முடிவு அவர் நேரடியாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் அலுவலகத்தில் போய் நின்றார். கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் பட்டா மாற்றம் செய்ய 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழிகாட்டுதல்படி நேற்று மதியம் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனை விவசாயி சீனு சந்தித்தார். அப்போது ரசாயன பவுடர் தடவிய 40 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சீனு பிரபாகரனிடம் கொடுத்தார்.

பணத்தைப் பார்த்ததும் முகமலர்ச்சியுடன் வாங்கிய பிரபாகரன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிரபாகரனை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரை அங்கிருந்து நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று இந்த லஞ்சப்பணம் இன்னும் யார் யாருக்கு கொடுக்க தயாராக இருந்தீர்கள் என்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஏ டி எஸ் பி தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனைத்து துறைகளிலும் லஞ்சம் பெறுபவர்களை தொடர்ந்து கையும் களவுமாக கைது செய்து வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.