Skip to main content

“4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு” - வானிலை மையம்!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
"4 days of heavy rain likely" - Meteorological Center

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன. அதோடு தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) கத்தரி வெயில் தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை என 25 நாட்களுக்கு இந்தக் கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. கத்தரி வெயில் காலத்தின் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி இன்று (08.05.2023) முதல் மே 11 ஆம் தேதி வரை என 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை (09.05.2023) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் (10.05.2024) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 11 ஆம் தேதி (11.05.2024)  கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்