Skip to main content

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

20 years prison for 65 year old man under pocso act

 

நாமக்கல் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 65 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை அருகே உள்ள சீராப்பள்ளியைச் சேர்ந்தவர் வீரமுத்து (65). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினால் மானம் போய்விடும் என அஞ்சிய சிறுமி, இதுகுறித்து யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்திருந்தார்.

 

தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்த அந்தச் சிறுமி, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். பள்ளி ஆசிரியைகள் சிறுமியை மீட்டு நாமகிரிபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்தபோதுதான் வீரமுத்து தன்னை மிரட்டி பாலியல் உறவு கொண்டதாகவும், அதன் விளைவாக தான் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறி கதறி அழுதார் சிறுமி.

 

இது குறித்த புகாரின் பேரில் ராசிபுரம் மகளிர் காவல்துறையினர் வீரமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் விஜயபாரதி ஆஜராகி வாதாடினார். இந்நிலையில், மே 17ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து வீரமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி முனுசாமி தீர்ப்பு அளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்