Skip to main content

போலி நகைக்கடன் வழங்கியதில் 1.39 கோடி மோசடி... கூட்டுறவு சங்க உதவி செயலாளர் பணிநீக்கம்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

1.39 crore fraud in issuing fake jewelery loan; Co-operative Union Assistant Secretary fired

 

சேலம் அருகே போலி நகைக்கடன்கள் வழங்கியதில் 1.39 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட புகாரின்பேரில், கூட்டுறவுச் சங்கத்தின் உதவி செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

 

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கிவருகிறது. இந்த சங்கத்தில், நகைக்கடன்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கடந்த 2017ஆம் ஆண்டு புகார்கள் கிளம்பின. 

 

இதுகுறித்து விசாரிக்க, சேலம் மண்டல கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் உத்தரவிட்டார். அலுவலர்கள் நடத்திய தணிக்கையில், இறந்த உறுப்பினர்களின் பெயர்களிலும், சங்க உறுப்பினர்களின் பெயர்களிலும் 1.39 கோடி ரூபாய்க்குப் போலி ஆவணங்கள் மூலம் நகைக்கடன் வழங்கி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

 

யார் யார் பெயரில் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதோ அவர்களின் வீடுகளுக்கு கூட்டுறவுத்துறை சார்பதிவாளர்கள் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். உறுப்பினர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயர்களில் நகைக்கடன் வழங்கியதாக நூதன முறையில் மோசடி செய்துள்ளனர். 

 

உறுப்பினர்களிடமிருந்து நகைக்கடன்களுக்கான அசல், அதற்கான வட்டி, அபராத வட்டித்தொகை வசூலிக்கப்பட்டதாக ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால், அதற்கான தொகை சங்கத்தின் வங்கிக் கணக்கில் இருப்பில் இல்லை. 

 

இந்த முறைகேடுகள் தொடர்பாக சங்கச் செயலாளர் வள்ளியண்ணன், உதவிச் செயலாளர் தங்கராசு, நகை மதிப்பீட்டாளர் அமுதா ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். 

 

அதன்பிறகு கூட்டுறவு சங்க விதிகள் பிரிவு 81ன் கீழ் உள்ளீட்டு விசாரணை நடந்துவந்தது. இதில், பூசாரிப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் நடந்துள்ள மோசடிகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து, இந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்டதாக உதவிச் செயலாளர் தங்கராசுவை நிரந்தர பணிநீக்கம் செய்து, சங்கத்தின் தலைவர் அம்மாசி உத்தரவிட்டுள்ளார்.

 

விரைவில் செயலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. மேலும், அப்போதிருந்த சங்கத் தலைவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

 

முறைகேட்டில் ஈடுபட்ட சங்கத்தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோருக்குச் சொந்தமான 5 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேலம் மாவட்டம் குண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைக்கடன் மோசடி செய்ததாக, அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் பெரியசாமி, எழுத்தர் ரகுமணி, நகை மதிப்பீட்டாளர் சேட்டு ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.