![1.20 lakh cubic feet of water is likely to flow into Mettur Dam- Jalshakti alert!](http://image.nakkheeran.in/cdn/farfuture/DG5XAgL1WlV-olumevJulhMk-bNiQDrcYr9J3EfjImA/1661605092/sites/default/files/inline-images/N779_0.jpg)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில் 42 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுமார் 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு நேற்று மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரை பகுதிகளின் ஆபத்தான இடங்களில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீர்வளத்துறை அறிவித்திருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.20 லட்சம் கன அடியாக இருக்க வாய்ப்பிருப்பதாக மத்திய அரசின் ஜல்சக்தி துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சேலம் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 88 ஆயிரம் கன அடியில் இருந்து 1.08 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.