கரோனா தாக்கம் குறித்து முதல்வர் எடப்பாடிக்குச் சமீபத்தில் ஒரு ரிப்போர்ட்டை அனுப்பிய மாநில உளவுத்துறை, வேலையிழந்த ஏழைகளும் வீடற்ற தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் சூழல் உருவாகத் துவங்குகிறது. பட்டினியால் ஒரு உயிர் போனாலும் அரசுக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/jAhXKZZ8BQxjAsjOxJCZqc5F7MZQvNDxH_gaDkD93aU/1585817608/sites/default/files/inline-images/840_1.jpg)
ரிப்போர்ட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்த எடப்பாடி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் ஒருமணிநேரம் விவாதித்திருக்கிறார். அந்த ஆலோசனையில், "பட்டினிச்சாவுங்கிறது கரானோவைவிட கொடுமையானது. அப்படி ஒரு சூழல் வரக் கூடாது.உள்ளாட்சித் துறை சார்பில், தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் இருக்கின்றன.சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள்.இவைகளை 24 மணிநேரமும் இயங்க வைக்கலாம்'' என வேலுமணி சொல்ல,அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள் என்றிருக்கிறார் எடப்பாடி.
இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் பேசிய வேலுமணி,அம்மா உணவகங்களை 24 மணி நேரமும் இயங்க வேண்டும். பணியாளர்களை 3 ஷிப்டாக மாற்றிக் கொள்ளுங்கள். சமையலுக்குத் தேவையான பொருட்களுக்குப் பற்றாக்குறை இருக்கக்கூடாது.தேவையான பொருள்கள் எப்போதும் இருக்க வேண்டும்.சாப்பிட வருபவர்களுக்கிடையே 1 மீட்டர் இடைவெளி இருப்பதையும் பணியாளர்கள் முகக் கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்யுங்கள் என உத்தரவிட்டிருக்கிறார்.அதன்படி, அம்மா உணவகங்களை 24 மணி நேரம் இயக்கவும்,அரசு காப்பகங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் நடமாடும் அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர் அதிகாரிகள்.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/gv0rQTx_PXLuPI5IJuaYa8xdNfauM7MEoWNnlN9wTPg/1585817643/sites/default/files/inline-images/454_7.jpg)
முந்தைய காலக்கட்டத்தில் சென்னையில் ஒரு அம்மா உணவகத்தில் தினசரி சுமார் 800 பேர் என 407 அம்மா உணவகத்திலும் 3,25,000 பேர் உணவருந்தி வந்தனர். தற்போது, பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 28-ந்தேதி எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் ஒரு நாளை 14 லட்சம் பேர் சாப்பிட்டுள்ளனர்.