Skip to main content

4000 பேருந்துகளுக்கான டெண்டர்; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

Tender for 4000 buses; Minister Sivashankar's announcement

 

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழக்கு ஒன்றிற்காகக் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணைக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “போக்குவரத்துத் துறையில் புதிய பணியிடங்களை நிரப்புவது குறித்து முதலமைச்சர் ஆணையிட்டு அரசாணை வெளி வந்துள்ளது. முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும், கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும் பணியிடம் நிரப்பப்பட இருக்கிறது. அதன் பிறகு 6 அரசு போக்குவரத்து கழகங்களிலும் படிப்படியாக பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பாஸ் வழங்குவது கொரோனா நேரத்தில் தாமதமாக வழங்கப்பட்டது. இந்த கல்வி ஆண்டில் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு பாஸ் வழங்கப்படும்.

 

புதிய பேருந்துகளில் 400 தாழ் தளப் பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு அது இறுதி செய்யப்பட இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் வழக்கமான பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் படிப்படியாக 4 ஆயிரம் பேருந்துகளுக்கான டெண்டர்கள் விடப்பட்டு விரைவில் புதிய பேருந்துகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும். அரசு வாகனங்களை 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு சொல்லியிருக்கிறது. அதில் பேருந்துகளும் அடக்கம். இந்திய ஒன்றியத்தில் அதிக பேருந்துகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

 

21 ஆயிரம் பேருந்துகள் இருக்கிறது. அதில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளை கடந்த பேருந்துகளாக இருக்கிறது. இருந்தாலும் 2 ஆண்டு கொரோனா காலத்தில் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. எனவே கொரோனா காலத்தை கணக்கில் கொண்டு காலகட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சார்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் நான் சொல்லியுள்ளேன். அவர் பிரதமரிடம் ஆலோசித்துவிட்டு சொல்வதாக சொல்லியுள்ளார். புதிய பேருந்துகள் வாங்கும் வரை பழைய பேருந்துகள் செயலில் இருக்கும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்