
தஞ்சாவூர் ஆட்சியர் முயற்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். இதன் பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவரது பெரும் முயற்சியில் பழமையான கட்டிடம் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகிவிடும் என்ற ஒரு கோணத்தில் யோசித்து அதை எப்படி மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்ற விதத்தில் சுற்றுலாத்துறை மற்றும் பிற துறைகளின் உதவியுடன் தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகத்தை இன்று மிகப்பெரிய தஞ்சாவூருக்கான அருங்காட்சியகமாக உருவாக்கியுள்ளார். சரஸ்வதி மகாலில் இருந்தும் சில பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எந்த மாவட்ட மக்களாக இருந்தாலும் அவர்களின் கலாச்சார பண்பாட்டினை தெரிந்துகொள்ள வேண்டும். அதை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்
600லிருந்து 700 பறவைகள் இருக்கின்ற ராஜாளி பூங்கா என்ற பறவை பூங்கா ஒன்றை உருவாக்கியுள்ளார். இங்கிருக்கும் மக்களுக்குத் தெரியும் அது எப்படிப்பட்ட இடமாக இருந்தது என்று. அதை சிரமம் மேற்கொண்டு சுத்தம் செய்து ராஜாஜி பூங்கா என்ற பூங்காவினை உருவாக்கியுள்ளார். அதில் 20 நாடுகளைச் சார்ந்த பறவைகள் இருப்பதாகக் கூட அதை நிர்வகிக்கின்ற நபர் சொல்லியுள்ளார். பொதுவாக வெளிநாடுகளில் தான் மாதிரியான பறவைகள் பூங்கா இருக்கும். அங்கிருக்கும் பறவைகள் நம் மேல் அமர்வதும் அதற்கு உணவு கொடுத்து அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அப்படி இந்த ராஜாளி பூங்கா உள்ளது” எனக் கூறினார்.
அண்ணாமலை ஈஷா யோகா மையம் அருகில் நிகழ்ந்த பெண்ணின் மரணம் குறித்துப் பேசியதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ஈஷா யோகா மையம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரிய பதிலைக் கொடுத்துள்ளார். இவர்கள் வெளியில் ஏதோ நாம் எந்த நடவடிக்கையும் எடுக்காத மாதிரி பேசிக்கொண்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு என்று வரும்பொழுது கட்சி பாகுபாடு இல்லாமல் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பவர்தான் முதலமைச்சர். சட்ட ஒழுங்கை மீறுபவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.