![Supporters involved in the Tarna struggle as the constituency was not allotted](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wfjfdf0_RgpGmzylmFh0T8hPSMoWyLfJxXUhi1kRefY/1615543418/sites/default/files/inline-images/congress-1.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதி, திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாவின் பேத்தியும், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளருமான ஜான்சிராணி கடும் அதிர்ச்சி அடைந்தார். பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தலைமை சீட் ஒதுக்கியதாக இன்று (12.03.2021) ஜான்சிராணி கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜான்சி ராணியின் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கே.எஸ்.அழகிரியை கண்டித்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். அங்கு போலீஸார் போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஊர்வலமாக சென்ற ஜான்சி ராணி ஆதரவாளர்கள், நிலக்கோட்டை நான்குமுனை சந்திப்பில், நிலக்கோட்டை தொகுதியைக் காங்கிரசுக்குப் பெற்றுத் தராத அழகிரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.