
நம்ம ஊர்ல ஒரு முறை கவுன்சிலரா இருந்தா பங்களா டைப்ல வீடு, ஸ்கார்ப்பியோ கார், இப்ப இன்னோவா காரா மாறிடிச்சி, எப்பவும் இரண்டு பேர் கூட இருக்கிற மாதிரி பந்தாவா இருப்பாங்க. இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தும், அதே மண் குடிசையில் வாழ்க்கை நடத்தி, இன்றும் சைக்கிளில் பயணம் செய்கிறார் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒடிசா மாநிலம் பாலசோர் மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீபிரதாப் சந்திர சாரங்கி (64).

பாலசோர் மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இளம் வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது ஆர்வம் கொண்ட பிரதாப் சந்திர சாரங்கி, ஒரு மடத்தில் சந்நியாசியாக சேர விரும்பியபோது, அவரை குறித்து விசாரித்த மடத்தை சேர்ந்தவர்கள், அவரது தாய் விதவை என்பதால், அவரை சென்று கவனிக்க சொல்லி விட்டனர். அப்போது முதல் மக்களுடன் நல்ல முறையில் பழகி சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார்.

மண் குடிசையில் சாதாரண வாழ்க்கை நடத்தி வரும் இவர், மது, ஊழல், போலீஸ் அத்துமீறலுக்கு எதிராக தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருபவர். இதனால், பாலசோர், மயூர்பன்ஜி மாவட்டங்களில் அவரது சேவை பரவியது. ஏற்கனவே 2 முறைஎம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். இந்த முறை மக்களவை தேர்தலில் பாஜகட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜூ ஜனதா தளம் வேட்பாளர் ரவீந்திர குமார் ஜனாவை 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஸ்ரீபிரதாப் சந்திர சாரங்கியின் தாய் கடந்தாண்டுதான் இறந்தார். மற்ற குடும்ப உறவுகள் ஏதும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. தன் தாயுடன் இருந்த அந்த குடிசையில்தான் தொடர்ந்து வசித்து வருகிறார். இந்த தேர்தல் பிரசாரத்தில் கூட சைக்கிள், ஆட்டோவில் சென்றுதான் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.