Skip to main content

வேட்பாளார் அவர்; வேட்புமனுத் தாக்கல் செய்தது இவர்! - விருத்தாசலம் காங்கிரஸில் குழப்பம்!

Published on 17/03/2021 | Edited on 18/03/2021
People in confusion on candidate as they filed nomination papers for the contest

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி சார்பாக, பா.ம.க வேட்பாளர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அதையடுத்து நெய்வேலி தொகுதியிலுள்ள முத்தாண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணனும், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் உள்ளிட்ட பலரும் விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்தனர். 

 

வேட்பாளர் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலம் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். தற்போது விருத்தாசலம் பகுதியில் கூட்டணியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ராதாகிருஷ்ணன் ஆதரவு திரட்டி வருகிறார். மேலும், அவர் தற்போது வரை வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.  அதேசமயம் கடந்த சில தினங்களாக தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் என்பவர் தான் அத்தொகுதியின் வேட்பாளர் என்று முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

 

தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாற்றப்பட்டாரா? என பொதுமக்கள் குழம்பி இருக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு காங்கிரஸ் துண்டு மற்றும் காங்கிரஸ் கொடியுடன் விருத்தாசலம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, நீதிராஜன் மாலை அணிந்தபடி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக விருதாச்சலம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரான சப்-கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த போது, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி பெயரை சொல்லாமல், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனான கார்த்தி சிதம்பரம் பெயரைச் சொல்லி முழக்கங்கள் எழுப்பி வாழ்த்துகள் தெரிவித்து மாலை அணிவித்தனர்.

 

காங்கிரஸ் கட்சியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மனுத் தாக்கல் செய்யாத நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு பிரமுகர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். எனவே, தொகுதி வேட்பாளர் நீதிராஜனா அல்லது ராதாகிருஷ்ணனா என கட்சியினர் குழம்பிப் போயுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையின் உட்கட்சிப் பூசலால், விருத்தாசலம் தொகுதியில் இரண்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

People in confusion on candidate as they filed nomination papers for the contest

 

அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நீதிராஜன், “பாரம்பரியமாக தங்களின் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். தற்போது பத்தாம் வகுப்பு கூட படிக்காதவரும், கொல்லைப்புறமாக நெய்வேலி பகுதியில் இருந்து, விருத்தாசலம் தொகுதிக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வந்திருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு எவ்வித வாக்குகளும் கிடைக்காது. காங்கிரஸ் தலைமை கை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை தனக்கு தரும் என்ற நம்பிக்கையில் வேட்புமனுத் தாக்கல் செய்ததாக” தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.