
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பைசரன் புல்வெளிகளில் நேற்று ((22.04.2025) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது ராணுவ சீருடை அணிந்து வந்த பயங்கரவாத கும்பல், சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, பஹல்காம் பகுதியில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் 3 பயங்கரவாதிகளின் வரைபடம் வரையபட்டுள்ளது. அஷிஃப் ஃபௌஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்திய நிலையில் 3 பேரின் வரைப்படங்கள் மற்றும் பெயர்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல் இந்த தாக்குதல் சம்பவங்களை பயங்கரவாதிகள் தங்கள் தலையில் பொருத்தியிருந்த அதிநவீன ஹெல்மெட் கேமராவில் பதிவு செய்தது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சியில் பைன் மரக்காடுகள் உள்ள பைரசன் பள்ளத்தாக்கிற்கு வந்தது முதல் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு திரும்பியது வரை அனைத்து காட்சிகளும் பதிவாகி உள்ளது. சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொள்வதற்கு தேர்வு செய்தது; தாக்கும்போது உறவினர்கள் கதறி அழுதது போன்ற இதயத்தை ரணமாக்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.