![OPS says Only Edappadi Palaniswami has come out of the BJP alliance](http://image.nakkheeran.in/cdn/farfuture/_MnPhtFpt83epFt2W3GjvZjCB5u2PuaE-e0ZLjqoDR8/1707482462/sites/default/files/inline-images/ops-ni_1.jpg)
இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க கூட்டணியில் அதிமுக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “இரட்டை இலை சின்னத்தை யாரும் முடக்க முடியாது. நிச்சயம் எங்களுக்கு தான் சின்னம் கிடைக்கும். வரும் தேர்தலில் அந்த சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெறுவோம். ஜெயக்குமார் பதவி வெறி பிடித்தவர். அதனால், அவரது கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய தேவையில்லை. பா.ஜ.க கூட்டணியில் அதிமுக தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மட்டும் பிரிந்து சென்றுள்ளார். தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. விரைவில் ஆலோசிக்கப்பட்டு கூட்டணி அறிவிக்கப்படும்” என்று கூறினார்.