Skip to main content

செவிலியர் தற்கொலைக்கு குடும்பத்தாருக்கு நீதி வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

Published on 15/02/2018 | Edited on 15/02/2018
nurse sucid


திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் மணிமாலா (வயது 24), கடந்த 10ந் தேதியன்று அங்குள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதற்குக் காரணம், அவரின் மேலதிகாரிகளான உதவி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி (வயது 24), தலைமை மருத்துவர் தமயந்தி (வயது 57) இருவருக்குமிடையேயான பனிப்போரும், அதன் காரணமாக இருவருமே மணிமாலாவுக்குக் கொடுத்துவந்த தொடர் கெடுபிடிகளும்தான்.

வெள்ளக்கோவில் வட்டார அரசுப் பள்ளி, அங்கன்வாடி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து மருந்துகள் கொடுக்கும் பணி சக்தி அகிலாண்டேஸ்வரியின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.

ஆனால் அவர் தன் பணியைச் சரிவரச் செய்வதில்லை. காலையில் பணிக்குச் செல்வதாக மருத்துவமனைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு பாதி வழியில் இறங்கி வேறெங்கோ சென்றுவிடுவார்.

கடந்த 8ந் தேதியன்றும் அவர் இதேபோல் சென்றுவிட, மணிமாலாவும் மருந்தாளுநரும் மட்டுமே பணி செய்துவிட்டுத் திரும்பினர்.

ஆனால் அன்று சக்தி அகிலாண்டேஸ்வரி பணிக்குச் செல்லாததை தமயந்தி எப்படியோ தெரிந்துகொண்டார். அதனால், ’மருத்துவர் இல்லாமல் செவிலியரான நீ எப்படி மருந்து கொடுக்கலாம்’ என்று மணிமாலாவைக் கேட்டு வாட்டியெடுத்து, அவருக்கு ‘குற்றக் குறிப்பாணை’ (மெமோ) கொடுத்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியுற்ற மணிமாலா, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பெரிய நரிமேட்டில் உள்ள தன் குடும்பத்தாரிடம் சொல்லி அழுது அரற்றியிருக்கிறார்.

அதேசமயம் மறுநாள் சக்தி அகிலாண்டேஸ்வரி, ’மெமோவுக்குப் பதில் விளக்கம் சொல்வதாக, என்னைக் காரணம் காட்டினாய் என்றால் உன்னை நான் சும்மா விடமாட்டேன்’ என்று மணிமாலாவை கடுமையாக மிரட்டியிருக்கிறார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த மணிமால 10ஆம் தேதியன்று மாலை புறநோயாளிகள் பிரிவில் பணியில் இருந்தபோது, தமயந்தி அவரை சொல்லவே கூசும்படியான தகாத வார்த்தைகளால் கண்டபடித் திட்டித் தீர்த்திருக்கிறார்.

இதனை மெல்லவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் உள்ளுக்குள்ளேயே பொருமித் துடித்த மணிமாலா, நேராகத் தன் அறைக்குச் சென்றார்.

மனமுடைந்த அவர் இரவு 7 மணி அளவில் அறையில் யாருமே இல்லாத நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து உடற்கூறாய்வுகாக மணிமாலாவின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

மணிமாலாவின் தற்கொலைக்கு மேலதிகாரிகளான சக்தி அகிலாண்டேஸ்வரியும் தமயந்தியும்தான் காரணம் என்பதை அறிந்து மணிமாலாவின் உறவினர்களும் காங்கேயம் மருத்துவமனைச் செவிலியர்கள் உள்பட அனைத்துச் செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

மூன்று நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தன.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், 13ந் தேதி நள்ளிரவில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் வடிவேல் அவர்கள் வந்து பேசி கீழ்க்கண்ட உறுதிமொழிகள் அளிக்கப்பட்டது.

1. உடனடி நடவடிக்கையாக தலைமை மருத்துவர் தமயந்தி, உதவி மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி இருவரும் பணியிடமாற்றம் செய்யப்படுவர்.

2. காவல்துறை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

3. வருவாய் வட்டாட்சியர் தலைமையில் தனி விசாரணை நடத்தப்படும்.

4. முதலமைச்சர் பொது நிவாரண நிதி மூலம் செவிலியர் மணிமாலா குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும்.

5. மணிமாலவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பொது சுகாதாரத் துறையில் பணி வழங்கப்படும்.

6. வருவாய் வட்டாட்சியர் அல்லது போலீஸ் விசாரணை முடிவின்படி பணிநீக்கம் போன்ற மற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

7. மருத்துவர்கள் குறைந்தது 100 கிலோமீட்டர் தள்ளி இடமாறுதல் நாளை செய்யப்படுவார்கள்.

இந்த உறுதிமொழிகளை ஏற்று போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மணிமாலாவின் உடலைக் குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர்.

இந்த உறுதிமொழிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொள்வதுடன், இனி இதுபோல் சோகங்கள் நடக்காதபடி பார்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி

சார்ந்த செய்திகள்

Next Story

''பெயர் வேண்டுமானால் க்யூட் ஆக இருக்கலாம் ஆனால்...''-சட்டப்பேரவையில் வேல்முருகன் பேச்சு!

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

velmurugan

 

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்துள்ளார்.

 

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே கடந்த 6 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று கேள்வி நேரத்தின் மீதான விவாதத்தின் பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். பிளஸ் டூ மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்வது ஏற்புடையதல்ல. மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என வலியுறுத்தி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.

 

இந்த தீர்மானத்தின் முன்மொழிவை தமிழக வாழ்வுரிமை கட்சி,  கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் பேசுகையில், ''ஒன்றிய அரசு தொடர்ந்து மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் பறித்துக்கொள்ள நினைக்கிறது. அந்த வகையில் உயர்கல்வியிலும் ஒன்றிய அரசு உரிமைகளை பறிக்க நினைக்கிறது. சட்ட, கால்நடை, விவசாய பல்கலைக்கழகம் என எந்த பல்கலைக்கழகங்களிலும் இனி இந்த மண்ணில் வாழுகின்ற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவ செல்வங்கள் கல்வி பயில வேண்டும் என்று சொன்னால் 12 ஆண்டுகள் தமிழக அரசின் கல்வி முறையில் பயின்ற படிப்புக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் மத்திய அரசு கொண்டுவரும் இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளை மட்டுமே வைத்து, அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்ற சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது. இது கல்வி உரிமையை பறிக்கின்ற ஒரு பாதக செயல். தேர்வின் பெயர் வேண்டுமானால் க்யூட் ஆக (CUET )இருக்கலாம். ஆனால் இது கியூட் ஆக இல்லை'' என்றார்.

 

 

 

Next Story

மே 18 தினம் அனுசரிப்பு: அஞ்சலி செலுத்திய வேல்முருகன்..! (படங்கள்)

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

2009இல் ஈழத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிங்கள அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழீழ உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது மே18 தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், கரோனா நெருக்கடி நிலை அமலில் உள்ள காரணத்தால் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் குறைந்த எண்ணிக்கையிலான தோழர்களுடன் பண்ருட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சுடரேந்தி வீரவணக்கம் செலுத்தினார்.