Skip to main content

'இனியும் மோடி நாட்டுக்கு நல்லதல்ல' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
'Modi is no longer good for the country' - CM Stalin's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில் சென்னையில் மூன்று இடங்கள் என மொத்தம் 21 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடும் பகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்ற பட்டியலும், அதேபோல் திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''இன்று வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை உறுதிமொழி மட்டுமல்ல வழிகாட்டும் நெறிமுறை. மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துகளை எல்லாம் கேட்டறிந்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் இந்த தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது திமுகவின் தேர்தல் அறிக்கை மட்டும் அல்ல, தமிழ்நாட்டு மக்களுடைய தேர்தல் அறிக்கையாக அமைந்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச பாஜக இந்தியாவை எல்லா வகையிலும் மிக மோசமாக பாழ்படுத்தி விட்டது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை. மொத்தத்தில் இந்தியாவில் இருந்த கட்டமைப்புகள் எல்லாத்தையும் சிறுக சிறுக சிதைத்து விட்டார்கள். தன்னுடைய கையில் கிடைத்த அதிகாரத்தை பாஜக அரசு வீணடித்து விட்டது என்பதுதான் உண்மை. இனியும்  மோடி ஆட்சி தொடருவது நாட்டுக்கு நல்லது அல்ல. நாட்டின் மீது கொண்ட அக்கறையால் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்கு இந்தியா கூட்டணியை இந்தியா முழுமைக்கும் அமைத்திருக்கிறோம். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மூலமாக அமையும் புதிய ஆட்சியானது மாநிலங்களை மதிக்கிற ஆட்சியாக அமைய வேண்டும், மாநிலங்களை அரவணைத்து செயல்படுகிற ஆட்சியாக இருக்க வேண்டும், சமத்துவமும், சமதர்மமும் கொண்ட ஆட்சியாக இருக்க வேண்டும்' என்றார்.

சார்ந்த செய்திகள்