
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றிய ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் திண்டுக்கல் பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது சித்தரேவு ஊராட்சியில் வாக்காளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் அனைத்தும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 354 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஜூன் நான்காம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பு ஏற்கும் நேரத்தில் மந்திரி பதவி ஏற்பதற்கு நாங்கள் டெல்லி செல்வோம். அமைச்சரவையில் இடம் பெறுவோம்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த முதல் நாளில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 500 ஆக குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்தவர் என்றும் மற்றவர்கள் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என்றும் குற்றம் சாட்டினார். எதிர்த்து போட்டியிடும் மாம்பழத்தை ருசிக்கலாம்; இலையை கீரை போல் அவித்து சாப்பிடலாம்; ஆனால் ஜீவராசிகள் உயிர் வாழ உதயசூரியன் அவசியம். எனவே அனைவரும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென கூறினார்.