Skip to main content

வேட்பாளருக்கு சட்டை வாங்கிக் கொடுத்த அமைச்சர்!

Published on 25/03/2019 | Edited on 25/03/2019


திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக கூட்டணி கட்சியான பாமகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து களமிறங்கியிருக்கிறார். ஆனால், திண்டுக்கல் தொகுதி அதிமுகவுக்கு அடித்தளம் போட்டது என்று கூட பார்க்காமல் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், இந்நாள் அமைச்சர் சீனிவாசன் ஆகியோரின் கோஷ்டிப் பூசலை கண்டு  இத்தொகுதியை முதல்வர் பழனிசாமி, மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பாமகவுக்கு  ஒதுக்கியுள்ளனர். இதனால் அதிமுகவினர் சரிவர தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்கள்.

 

seenivasan


அதுபோல் வன்னியர் சமூகத்தினர் ஓரளவுக்கு இருந்தும்கூட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை தலைமை அறிவிக்கவில்லை என்ற மனவருத்தமும் வன்னியர் சமூகத்தினர் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் பாமக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஜோதிமுத்துவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்கி தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஊழியர் கூட்டங்களை போட்டு கட்சிக்காரர்களையும் கூட்டணிக் கட்சியினரையும் தேர்தல் களத்தில் இறக்கி இருக்கிறார். இருந்தாலும் தேர்தல் செலவுக்கு தலைமையிலிருந்து இதுவரை பணம் வராததால் அனைத்து செலவுகளையும் அமைச்சர் சீனிவாசனே பார்த்து வருகிறார்.

அது போல் பாமக  வேட்பாளரான ஜோதிமுத்து எப்பொழுதும் அரைக்கை வண்ணச் சட்டை அணிந்துதான் பழக்கம். ஆனால், அரசியலில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை கவர இது சரிப்பட்டுவராது என்று அறிவுரை சொன்ன அமைச்சர் சீனிவாசன், அதோடு நிற்காமல் தானே திண்டுக்கல்லில் உள்ள ராம்ராஜ் துணிக் கடைக்கு ஆள் அனுப்பி 20 வெள்ளை முழுக்கை சட்டைகளை உரிமையோடு எடுத்துக் கொடுத்து தேர்தல் களத்தில் இறக்கியிருக்கிறார். பாமக வேட்பாளர் ஜோதிமுத்து வெள்ளை முழுக்கை சட்டையுடன் தான் தற்போது தேர்தல் களத்தில் இறங்கி வாக்காளர்களை சந்தித்து  வருகிறார். 
  

 

சார்ந்த செய்திகள்