![“Judgment in our favor” OPS team ready for new route; Vaithlingam is busy](http://image.nakkheeran.in/cdn/farfuture/LBowmSF1n9ejCRbsqEMjTV8ekbjUpnM-eEsfad3ltwE/1677144285/sites/default/files/inline-images/33_65.jpg)
அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான் என ஓபிஎஸ் தரப்பு வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. இந்த தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தான் உச்சநீதிமன்றமும் தீர்ப்பினை வழங்கியுள்ளது. பொதுக்குழு கூடியது செல்லும் என சொல்லியுள்ளார்கள். ஆனால், சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கை எங்களது தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றும் சொல்லியுள்ளார்கள். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து நிற்போம். எங்களுக்கு இது பெரிய பாதிப்பு இல்லை. முழு தீர்ப்பையும் பார்த்தபின் எங்களது நடவடிக்கைகளை எடுத்து சொல்லுவோம். இது எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான்” எனக் கூறினார்.