Skip to main content

“தி.மு.க.வை நிராகரிக்கின்றோம் என்ற பேனரை வையுங்கள்..” முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

Former minister natham visvanathan speech

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வத்தலகுண்டில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். வத்தலக்குண்டு  நகரச் செயலாளர் பீர்முகமது வரவேற்றார். கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் ஆகியோர் பேசினர். அதன்பின் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன், “பி.ஜே.பி., காங்கிரஸ் என மத்திய அரசில் 15 ஆண்டுகாலம் தி.மு.க. அங்கம் வகித்திருந்த வேலையில்தான் தமிழகத்தில் மத்திய அரசுகள் மெல்லமெல்ல இந்தியைத் திணித்தன.

 

ஆனால், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழ் மொழியை அ.தி.மு.க. அரசுதான் பாதுகாத்துள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாள்தோறும் ஒவ்வொரு வேடம் போடுகிறார். தற்போது கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து விலகி, வேல் ஏந்தி வேடம் போட்டுள்ளார். அ.தி.மு.க.வை நிராகரிக்கின்றோம் என்று ஊர் ஊராகச் சென்று கிராமசபை நாடகம் நடத்துகிறார். 

 

தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தி.மு.க. செய்த துரோகங்களையும் பட்டியலிட்டு தி.மு.க.வை நிராகரிக்கின்றோம் என்ற பதாகைகளை அ.தி.மு.க.வினர் வைக்க வேண்டும். பொதுமக்களிடம் தி.மு.க.வை நிராகரிக்கின்றோம் என்ற முழக்கங்களை எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறினார். 

 

கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மாணவர் அணி நிர்வாகிகள் எனப் பலர்  கலந்துகொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.