ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்? ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்’ என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? ‘காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை’ என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கைப் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்ட ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.