Skip to main content

மின்வாரிய பணியாளர்கள் தேர்வு: வயது வரம்பை உயர்த்த வேண்டும்! ராமதாஸ்

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

 

மின்வாரியப் பணியாளர் தேர்வில் வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்பயன்பாட்டு அளவு கணக்கீட்டாளர், உதவிப் பொறியாளர்கள், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 2400 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. எனினும், அப்பணிகளுக்கான வயது வரம்பு காலத்திற்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படாதது பலரின் வாய்ப்புகளை பறித்திருக்கிறது.

 

pmk



மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளர் பணிக்கு 1300 பேரும், உதவிப் பொறியாளர் பணிக்கு 600 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அனைவருக்கும் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பை பொறுத்தவரை பொதுப்பிரிவினருக்கு 30 வயது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 32 வயது, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர இளநிலை உதவியாளர் (கணக்குகள்) பணிக்கு 500 பேர் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் பொதுப்பிரிவினருக்கு 30 வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.


 

 

உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் பணிகளில் அனைத்துப் பிரிவினருக்கும், இளநிலை உதவியாளர்  பணிக்கு பொதுப்பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு எவ்வகையிலும் நியாயமற்றது. போட்டிகள் நிரம்பிய இன்றைய சூழலில் போட்டித்தேர்வுகளை எழுதி, நேர்காணலில் வெற்றி பெற்று பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளாகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிலும்,  பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குள்ளும் அரசு பணிகளில் சேருவது என்பது  உலகின் எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது அதிசயமாகத்தான் இருக்க முடியும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெறுகின்றனர்; சுமார் 4 லட்சம் பேர் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பை முடிக்கின்றனர். ஆனால், இவர்களில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட ஆண்டு தோறும் அரசு வேலை கிடைப்பதில்லை. அதேபோல், அரசு பணிகளுக்கு ஆட்தேர்வு ஆண்டு தோறும் நடப்பதும் இல்லை. இளநிலைப் பட்டம் பெற்ற ஒருவர் 30 வயதுக்குள் இரு முறையும்,  35 வயதுக்குள் மூன்று முறையும் அரசு பணிக்கான போட்டித் தேர்வை எழுதுவது மிகப்பெரிய வரம்.
 

உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது பொதுப்பிரிவினர் 30 வயதுக்குப் பிறகும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குப் பிறகும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குப் பிறகும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும். மின்வாரியப் பணிகளுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்புகள் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நிர்ணயிக்கப்பட்டவை அல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில், மேற்கண்ட 3 பணிகளுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதி பொறியியல் படிப்பு அல்லது கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டப்படிப்புகள் ஆகும். எந்த வகுப்பிலும் தோல்வியடையாத ஒரு மாணவர் பட்டப்படிப்பை முடிக்கவே  21 அல்லது 22 வயதாகி விடும். ஆனால், இந்த 3 பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22 வயதில் தான் ஒருவரால் கல்வித்தகுதியையே பெற முடியும் எனும் சூழலில், அவரை 18 வயதில் தேர்வெழுத அனுமதிப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும்.


 

 

மின்வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு கேங்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட போது, அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கு 37 ஆகவும், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 40 ஆகவும் இருந்தது. ஒரே ஆண்டில் அதிகபட்ச வயது வரம்பை அனைத்துப் பிரிவினருக்கும் தலா 5 ஆண்டுகள் குறைந்தது நியாயமற்றது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சில போட்டித் தேர்வுகளை எழுத இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக உள்ளது. பல தேர்வுகளுக்கு வயது வரம்பு இல்லை.
 

மேற்கண்ட அம்சங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து மின்வாரியப் பணியாளர் தேர்வில் அதிக பட்ச வயது வரம்பை நிர்ணயிப்பதில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை அரசு களைய வேண்டும். அனைத்து பணிகளுக்கும் அதிகபட்ச வயதை குறைந்து 5 ஆண்டுகள் உயர்த்த மின்வாரியம் முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.