Skip to main content

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் நடக்குமா..?

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

நீண்ட நாட்களாக காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த இடைத் தேர்தலை சந்திக்க தீவிரம் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேலூர் மக்களவை இடைத்தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக, அதற்கு பழிவாங்கும் வகையில் இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வசமும், விக்கிரவாண்டி தொகுதி திமுக வசமும் இருந்த நிலையில் இரண்டில் ஏதாவது ஒன்றை கைப்பற்றினால் கூட தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி என அதிமுக தலைமை கருதுகிறது. இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற 50 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்து வருகின்றன. அதேபோல் திமுக தரப்பில் இருந்தும் அதிகமாக செலவு செய்து விக்கிரவாண்டி தொகுதியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது


இந்த நிலையில் தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட 1.5 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். ஆரம்ப நாட்களிலேயே பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணப்பட்டுவாடா எல்லை மீறினால் ஆர்கேநகர் தேர்தலை ரத்து செய்தது போல், இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் தயங்காது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பணப்பட்டுவாடா கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 

 

சார்ந்த செய்திகள்