Skip to main content

“கனிமொழியை சிறையில் சந்திக்காத ஸ்டாலின்... செந்தில் பாலாஜியை சந்திக்கிறார்” - எடப்பாடி பழனிசாமி

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

Edappadi Palanisamy video about Stalin

 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, முதலமைச்சர் காணொளி வாயிலாக வெளியிட்ட அறிக்கை உள்ளிட்டவை குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். 

 

அதில் அவர், “உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இரண்டு மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இல்லையென்றால் தாங்களாக ஒரு குழு அமைத்து விசாரிப்போம் என்று தீர்ப்பு அளித்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை, செந்தில் பாலாஜி வீடுகள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனை நடத்திய அன்று காலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு வந்த செந்தில் பாலாஜி, முழு ஒத்துழைப்பு தருவதாக சொன்னார். ஆனால், ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் அமலாக்கத்துறையின் முன் ஆஜராகவில்லை. 

 

அதனைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் சமூக வலைத்தளத்தில் பேசினார். அவர் பேச்சில் அவ்வளவு பதற்றம். ஆனால், அந்த பதற்றம் ஏன் என்று தான் தெரியவில்லை. 

 

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ரூ. 30,000 கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உதயநிதியும், சபரீசனும் தடுமாறுகிறார்கள் என ஆடியோ வெளியிட்டார். இதில் பெரும்பான்மையான பணம் செந்தில் பாலாஜி மூலம் வந்ததாக வலைத்தளம் மற்றும் பத்திரிகைகள் மூலம் செய்திகள் வந்தன. இந்நிலையில், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதும் அவர் இந்தச் செய்தியை சொல்லிவிடப் போகிறார் எனும் பயத்தில் முதல்வர் சென்று அவரை பார்க்கிறார். செந்தில் பாலாஜி ஏதாவது சொல்லிவிட்டால் தன் குடும்பமும் பாதிக்கும், அரசியல் வாழ்க்கையும் சூனியமாகும் ஆட்சியும் போய்விடும் எனப் பதறி பேட்டி அளிக்கிறார்.

 

முன்னதாக அவரது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் ரெய்டு நடந்தபோது எதுவும் பேசவில்லை. அதேபோல், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை ஆ. ராசாவும், கனிமொழியும் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர். அப்போது இந்த ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லை. அப்போது ஸ்டாலின் அவரது சகோதரியைக் கூட திஹார் சிறைக்குச் சென்று நேரடியாக சந்திக்கவில்லை. ஆனால், இன்று செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும் இவ்வளவு பதற்றம் எதற்காக?

 

டாஸ்மாக் மதுபான கடைகள் தமிழ்நாட்டில் சுமார் 6000 இருக்கிறது. இதில், 5,600 பார்கள் இருக்கின்றன. அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 3,500 பார்களுக்கு டெண்டரே விடவில்லை. இந்த பார்களை கண்டுபிடித்து தடுக்க வேண்டிய காவல்துறை இன்று திமுகவின் ஏவல்துறையாக மாறிவிட்டது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் அருந்தியவர்கள் 23 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முறைகேடாக நடந்த பார்களை கண்டறிந்து சீல் வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக அரசுக்கு இந்த முறைகேடு பார்கள் தெரியவில்லையா. இதுபோல், தமிழ்நாடு முழுக்க 3500 பார்கள் முறைகேடாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் முறைகேடாக வரும் பணம் எல்லாம் முதலமைச்சர் குடும்பத்திற்கு தான் சென்றுகொண்டிருக்கிறது. இந்தச் செய்தியை எல்லாம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் சொல்லிவிடுவாரோ எனப் பதறிப்போய் பார்க்கிறார்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.