
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டதை அடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்துள்ளது.
திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்சஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். தமிழகத்தில் பெரும்பாலான நெடுஞ்சாலை, சாலை கட்டும் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்தார். இந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடப்பாடி பழனிசாமி மீது எடுக்கவில்லை என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஆர்.எஸ். பாரதி.
இதனை அடுத்து, இதுகுறித்து விளக்கம் அளிக்க உயர்நீதி மன்றம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ”எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதனை அடுத்து இந்த வழக்கை சிபிஐ எடுத்து நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்சநீதிமன்றத்தை நாடி, சிபிஐயிடம் விசாரணை வழங்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.