Skip to main content

கனிமொழியின் அதிரடி! - இந்தி மொழி நாளில் திராவிடக் காணொளி!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

Kanimozhi MP Twits ‘Dravidam is a Lifestyle’

 

இந்தி மொழி நாளாக செப்டம்பர் 14-ஐ இந்தியாவெங்கும் பாஜக தரப்பு கொண்டாடி வருகிற நிலையில், அதே நாளில் - திமுக முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி. 

 

ஆண்டுதோறும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளோடு, திமுக தொடங்கிய நாளையும் இணைத்து செப்டம்பர் 15, 16, 17 ஆகிய நாட்களில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இவ்வருடம் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, இன்று (14.09.2021) தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் ‘திராவிடம் ஒரு வாழ்க்கை முறை’ என்ற காணொளி ஒன்றை வெளியிட்டு முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்திருக்கிறார்.  

 

அந்தக் காணொளியின் ஆங்கிலத் தலைப்பு ‘Dravidam is a Lifestyle’ என்று சமூக ஊடகங்களில் பரபரப்பாக டிரெண்டாகி வருகிறது. அந்தக் காணொளியில் "பத்து வருடப் போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி, நல்லாட்சியாக மலர்ந்திருக்கிறது. இது மக்கள் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த ஆட்சி. பெரியாரின் கனவான, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியதோடு, அறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி கொள்கையினை நிலைநிறுத்தும் விதமாக சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டத்தை எதிர்த்தும் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. இப்படி ஒரு மாநிலத்தை, மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சிதான் ஆள வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறுத்தக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி அமைத்திருக்கிறது. 

 

கலைஞரைப் போல எல்லோரையும் ஒன்றாக இணைத்து, எல்லோருக்கும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் தரக்கூடிய ஆட்சியாகவும், அண்ணன் ஸ்டாலின் நடத்திவருகிறார். இத்தனை ஆண்டுகளக திராவிடம் என்ற உணர்வு, எல்லோருக்கும் சுயமரியாதை இருக்க வேண்டும் என்ற உணர்வை விதைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும், இந்தத் திராவிடத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது முக்கியம். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு உணர்வு, இயக்கம் என்பதையெல்லாம் தாண்டி, அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. 

 

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர்,  இவர்களெல்லாம், இந்த மண்ணில் விதைத்திருக்கக் கூடிய விருட்சமான திராவிட உணர்வே, என்றும் நம்மைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய கொள்கைகளை, அவர்களுடைய கனவுகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்குப் பெண்கள், இளைஞர்கள், இந்த சமூகத்திலே யார் யார்க்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அவர்கள் எல்லாம், ஒன்றிணைந்து தமிழ்நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அந்த பாதைக்குப் பெயரே திராவிடம்!” என்று குறிப்பிட்டுள்ளார். கனிமொழியின் இந்த அதிரடி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.