
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடவில்லை என்றாலும் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டு களத்தை பரபரப்பாகி வருகிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.
மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சு.முத்துசாமி சென்ற 19 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து தேர்தல் களத்திலேயே பணியாற்றி வருகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, 22 ஆம் தேதி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளரான இளங்கோவன் தேர்தல் நடைபெறும் தொகுதியான ஈரோட்டுக்கு இன்னும் வராத நிலையில், திமுகவினர் தான் ஓட்டு வேட்டையில் தீவிரமாக உள்ளார்கள்.
23 ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஈரோடு கிழக்கு தொகுதியிலுள்ள பெரியசேமூர் பகுதி 21வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு, வள்ளியம்மை வீதி, ராதாகிருஷ்ணன் வீதி, பெரிய வலசு ஆகிய இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த நிகழ்வில் திமுக மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்ட கழக மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் திமுக வேகம் காட்டி வருகிறது.