Skip to main content

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி போட்டி! 

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

DMK MLA Wife  contest for the post of Panchayat President

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்து மாவட்ட கவுன்சிலர்கள், 30 ஒன்றிய கவுன்சிலர்கள், 50-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், 300-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் போட்டியிடுவதற்குக் கடந்த நான்கு நாட்களாக வேட்பு மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

 

நேற்று, பௌர்ணமி தினம் என்பதால் பல முக்கிய நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் திருநாவலூர் திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் வசந்த வேல், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், மேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜவேல், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுருவை திமுக சார்பில் எதிர்த்துப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் மணிகண்ணன். இவரது மனைவி கயல்விழி. 

 

கயல்விழி மணிகண்ணன் குடியிருக்கும் பகுதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நகர் கிராமத்தில் உள்ளது. இதனால் எம்.எல்.ஏ. மணிகண்ணன் மனைவி கயல்விழி, நகர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைப் பிடிக்க வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் இவர் 1996 - 2001 கால கட்டத்தில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக பதவி வகித்தவர். அதன்மூலம் கிராமப்புறங்களில் பல அரிய திட்டங்களைச் செய்து மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வேட்புமனு தாக்கலின் போது ஏராளமான திமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்து; 2 பேர் பலியான சோகம்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A subsequent incident; Tragedy with 2 peoples

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது லாரியின் வேகத்தை டிரைவர் திடீரென குறைத்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் திண்டுக்கல்லில் இருந்து சென்னையை நோக்கி லாரிக்கு பின்னால் வந்த கார் லாரியின் பின்பக்கம் மோதியுள்ளது. இந்த சூழலில் திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து காரின் மீது மோதியது.

இதனால் விபத்தில் சிக்கிய பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்து சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடைக்கல் போலீசார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரி மீது கார் மற்றும் பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் என 2 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.