![Deputy Chief Minister Udayanidhi's explanation on Why didn't Kanimozhi participate?](http://image.nakkheeran.in/cdn/farfuture/xyGcOo47k8T5RXHVgP3BBUHK5NQqwrm_dsnqdjCuCf4/1731635448/sites/default/files/inline-images/udhann.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடிக்குச் சென்றார். நிர்வாகிகள் கூட்டம், திமுக பிரமுகரின் இல்லத் திருமண விழா உள்ளிட்ட கட்சி ரீதியான நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், அரசு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், இந்த நிகழ்ச்சிகளில் அந்த தொகுதி எம்.பி கனிமொழி பங்கேற்வில்லை. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வந்தது.
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலினிடம், தூத்துக்குடி எம்.பி பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “நான் இங்கு வரும்போது அவரிடம் சொல்லிவிட்டு தான் வந்தேன். அவர் அவசர வேலையாக வெளிநாடு சென்றிருக்கிறார். அடுத்த 10,15 நாட்களில் இங்கு வருகிறேன் என்று சொல்லி இருக்கேன். அதன் பின்னர், இரண்டு பேரும் சேர்ந்து ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறோம்” என்று கூறினார்.