Skip to main content

கூட்டணியில் விரிசல்; பாஜகவுக்கு தடைபோட்ட மேலிடம்!

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Conflict between AIADMK and BJP

 

அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்த நிலையில், “கூட்டணி முறிந்தது. இது தான் அதிமுகவின் நிலைப்பாடு” என்று அதிகாரப்பூர்வமாக நேற்று (18/09/23) தெரிவித்தார் அதிமுகவின் சீனியர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார்.  கடந்த 14-ந்தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வது குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அமித்ஷா தரப்பில் வைக்கப்பட்ட இடப்பகிர்வு எண்ணிக்கையை எடப்பாடி மறுத்துள்ளார். இருப்பினும், “கட்சியின் உயர்மட்டக் குழுவில் விவாதிக்காமல் உங்களின் கோரிக்கையை ஏற்க இயலாத நிலையில் இருக்கிறேன். கலந்து பேசிவிட்டு தகவல் தருகிறேன்” என அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

 

ஆனால், இதில் உடன்பட மறுத்த அமித்ஷா, “பாஜகவின் எதிர்பார்ப்பு இது. அதனை நீங்கள் நிறைவேற்றுங்கள். உங்கள் சொல்லுக்கு கட்டுப்படாதவர்களாக அதிமுக நிர்வாகிகள்?” என கடுமைக் காட்டியுள்ளார். அப்போதும் அமைதியாகவே பேசிய எடப்பாடி, “அதிமுக-பாஜக கூட்டணியில் நீங்கள் தான் சீரியஸ் காட்டுகிறீர்கள். ஆனால், அண்ணாமலை காட்டவில்லை. கூட்டணியை முறிக்கும் வகையில் தான் அவரது சீக்ரெட் நடவடிக்கைகள் இருக்கிறது. தமிழக பாஜகவில் இருந்தே எனக்கு தகவல் கிடைக்கிறது. இப்படியிருப்பதால் அண்ணாமலை மீது அதிமுகவினர் வெறுப்பாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, உங்கள் கோரிக்கையை சொல்லி உயர்மட்டக்குழுவை எப்படி சம்மதிக்க வைக்க முடியும்?, அதனால், அண்ணாமலையை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். இல்லையெனில் அவரை மாற்றுங்கள். அண்ணாமலை இல்லாத பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவின் உயர்மட்டக்குழுவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்று தெளிவாக தெரிவித்துள்ளார். 

 

14-ஆம் தேதி நடந்த சந்திப்பில் இப்படி விவாதம் நடக்க, தலைவர் பதவியில் இருந்து தன்னை மாற்றும்படி எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய விசயத்தை தெரிந்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது மாதிரி ஏதேனும் செய்ய வேண்டும் என திட்டமிட்ட அண்ணாமலை,  மறுநாள் 15-ந்தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளின் போது, அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் தவறாக சில கருத்துக்களை பதிவு செய்தார். இது, அதிமுகவின் அனைத்து மட்டங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியும் கோபம் கொண்டார். உடனடியாக ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகத்தை தொடர்புகொண்டு, அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்வினையாற்றச் சொல்லி உத்தரவிட்டதாக அதிமுக வட்டாரம் தெரிவித்தது.

 

மேலும், அதன்படியே அண்ணாமலையை கடுமையாக கண்டித்தனர். இதனால் அதிமுக-பாஜக இரு தரப்பும் வார்த்தைகளில் மோதிக் கொள்ள, சீனியர்களுடன் விவாதித்தார் எடப்பாடி பழனிசாமி. இனியும் பொறுக்க வேண்டாம் என்ற நிலையில் தான், கூட்டணி இல்லை என அறிவிக்கச் சொல்லி ஜெயக்குமாருக்கு எடப்பாடி உத்தரவிட நேற்று(18/09/23) அண்ணாமலையையும், பாஜகவையும் கடுமையாக தாக்கிய ஜெயக்குமார், “பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ்; அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி இல்லை. எடப்பாடியின் உத்தரவின் பேரிலேயே சொல்கிறேன். அதிமுகவின் நிலைப்பாடு இதுதான்” என்று அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். 

 

இந்த அறிவிப்பு, அதிமுகவினரிடம் உற்சாகத்தைக் கொடுக்க, தமிழக முழுவதும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர் அதிமுகவினர். அதேசமயம், ஜெயக்குமாரின் விமர்சனத்துக்கு அண்ணாமலையின் ஆதரவாளர்களான பாஜக நிர்வாகிகள் கடுமையாக எதிர்வினையாற்றினர். இதனால் இரு தரப்பினரும் ஊடகங்களில் கடுமையாக பரஸ்பரம் எதிர்த்து பேசிக்கொண்டனர். இதனால் அதிமுக-பாஜக வளாகங்களில் உறுமல் சத்தம் அதிகரித்தபடி இருந்தது. 

 

இதையெல்லாம் கவனித்த ஒன்றிய அரசின் உளவுத்துறை, “தமிழக பாஜகவின் அரசியல் ஆரோக்கியமற்றதாக இருக்கிறது” என்று டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அதேபோல,  தமிழக பாஜகவின் மாநில  நிர்வாகிகள் சிலர், “அண்ணாமலையின் தன்னிச்சையான அரசியலும், அவரது பேச்சும் பாஜகவுக்கு நன்மை செய்யவில்லை. அதிமுகவுடன் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும்” என்கிற ரீதியில்  கட்சியின் தேசிய தலைமைக்கு புகார் தெரிவித்திருக்கிறார்களாம்.  இதனை ஆராய்ந்த கட்சியின் தேசிய தலைமை அண்ணாமலை மீது அதிருப்தியடைந்துள்ளது. 

 

கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், அண்ணாமலையை தொடர்புகொண்டு கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் அப்செட் ஆன அண்ணாமலை, வீட்டிலேயே முடங்கி விட்டார். அண்ணாமலைக்கு டோஸ்விட்ட கையோடு, பாஜக மாநில நிர்வாகிகளுக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் பி.எல்.சந்தோஷ். இதனையடுத்து, “பாஜக - அதிமுக கூட்டணி பாறை போல உறுதியாக உள்ளது” என்று திருப்பதி நாராயணன் பதிவு செய்துள்ளார். அதேபோல, கரு.நாகராஜனும், “கூட்டணியை பற்றி தேசிய தலைமைதான் முடிவெடுக்கும். அதனால், கூட்டணி குறித்து பாஜகவினர் யாரும் விமர்சிக்கக் கூடாது” என்று பாஜகவினருக்கு உத்தரவிடும் வகையில் பதிவு செய்துள்ளார். கூட்டணிப் பற்றி பேச தமிழக பாஜகவுக்கு  டெல்லி மேலிடம் போட்டுள்ள இந்த தடை உத்தரவு தான் பாஜகவில் தற்போது ஹை-லைட்டாக பேசப்படுகிறது என்கின்றனர் விஷயம் அறிந்தோர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Next Story

ஆதீனத்துக்கு மிரட்டல்; பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The court is acting on the bail plea of ​​BJP executives for intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, குடியரசு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.