Skip to main content

"எங்களின் ஆட்சிக்கு கிடைத்த தீபாவளி பரிசாக நினைத்து கொண்டாடுகிறோம்" -  முதலமைச்சர் நாராயணசாமி!!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த படியாக வந்த என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 வாக்குகள் பெற்றார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 7,171 வாக்குகள் அதிகம் பெற்றார். காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், எம்.பி வைத்திலிங்கம் ஆகியோர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
 

CM Narayanasamy press meet


வெற்றி பெற்ற ஜான் குமார் தலைவர்களிடம் வாழ்த்துகள் பெற்றார். காமராஜ் நகர் தேர்தல் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “ காமராஜ் நகர் தொகுதி மக்கள் எங்களின் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த பிரச்சாரமும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆதரவு பிரச்சாரமும் ஒரு காரணம். துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இலவச அரிசிக்கு தடை விதிப்பது என ஆட்சிக்கும், மக்களுக்கும் எதிராக செயல்படுவதை உணர்ந்து அவருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வாக்களித்திருக்கிறார்கள். 

மேலும் "எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. எதிரி கட்சியாக செயல்படுகிறார்கள். அவர்களிடம் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை என்.ஆர்.காங்கிரஸ் 7 பேர், அ.தி.மு.க 4, பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் 3. அவர்களிடம் 11 பேர் மட்டுமே உள்ளனர். எங்களிடம் 19 பேர் உள்ளனர். அப்படியிருக்க எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி அவர்கள் தம்மிடம் உள்ள எம்.எல்.ஏக்கள் ஓடி விடக்கூடாது என்பதற்காக, பொய்யான நம்பிக்கை கொடுத்து ‘ஆட்சி மாற்றம் ஏற்படும், ஆட்சி மாற்றம்’ என்று கடந்த மூன்றாண்டு காலமாகவே சொல்லி ஏமாற்றி வருகிறார். அவர்கள் சட்டமன்றத்துக்கு வருவதில்லை, மக்கள் பிரச்சினைகளை பேசுவதில்லை. மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து எந்த வித போராட்டமும் நடத்தியதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு கவர்னர் கிரண்பேடி அவர்கள் கொடுக்கும் தொல்லைகளை எதிர்த்து கேட்பதில்லை.


இதன் வெளிப்பாடுதான் மக்கள் அவருக்கு தக்க பாடத்தை இந்த இடைத்தேர்தலில் அவர்களுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள். எங்களை அங்கீகரித்திருக்கிறார்கள். காமராஜ் நகர் வெற்றியை எங்களின் ஆட்சிக்கு கிடைத்த தீபாவளி பரிசாக நினைத்து கொண்டாடுகிறோம்” என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.