Skip to main content

காங்கிரஸைத் தொடர்ந்து முதல்வர் மம்தா பேனர்ஜி அதிரடி

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

cm Mamata Banerjee takes action after Congress

 

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

 

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத்மான் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.

 

கூட்டத்தின் போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சிக்குப் பிரதமர் பதவியை அடைவதில் விருப்பம் இல்லை எனத் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எனக்குப் பிரதமராகும் ஆசை இல்லை. 2024 இல் பா.ஜ.க.வை மத்தியிலிருந்து வெளியேற்றுவதைத் தவிர எங்களுக்கு வேறு எந்தக் கோரிக்கையும் இல்லை. 26 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்