Skip to main content

ரெய்டில் சிக்கிய பண விநியோகஸ்தர்கள், தேர்தலை நிறுத்தலாமா என ஆலோசனை..?

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

Cash distributors caught in raid, can the election be stopped? As advised

 

வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ராமு. இவருக்கு வாக்களிக்க வாக்களார்களுக்குப் பணம் வழங்க கல்புதூர் என்கிற பகுதியில் உள்ள நாயுடு ரெஸ்டாரென்ட் என்ற தனியார் ஹோட்டலில் கிளைக் கழக நிர்வாகிகளால் பணம் பிரித்து தரப்படுகிறது என தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் சென்றது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 1ஆம் தேதி இரவு திடீரென அந்த ஹோட்டலில் அதிகாரிகள் ரெய்டு செய்தனர்.

 

அப்போது, அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 7 பேர் ஹோட்டலில் அமர்ந்து, வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு, பூத் வாரியாக கணக்கிட்டுப் பணம் பிரித்து பண்டல் செய்துகொண்டிருந்தனர். அங்கு சென்ற அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர். சுமார் 18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரூபாய் மட்டும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. அங்கிருந்த வாக்காளர் பட்டியல், பூத் பட்டியல், அதிமுக வேட்பாளர் ராமு படம் அச்சடிக்கப்பட்ட பேட்ச்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். இதனை மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரத்திடம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் பெயரில் வேட்பாளர் ராமு, ஹோட்டல் உரிமையார், கட்சியினர் 7 பேர் என மொத்தம் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

 

வாக்காளர்களுக்குப் பணம் வழங்கும் முன் பிடிப்பட்ட வாக்காளர் பட்டியல், அதிமுக வேட்பாளரின் படம், எந்தெந்த பூத்துக்கு எவ்வளவு தொகை, அதனை வாங்கிச் சென்றது யார், பெயர், கைபேசி எண், அவர்களுக்கான வழிச்செலவு தொகை போன்றவற்றைக் கணக்கிட்டு தந்துள்ளனர். பணம் பெற்றுக்கொண்டதற்கு கையெழுத்தும் வாங்கியுள்ளனர். இவைகளை எழுதி வைத்திருந்த நோட்டு, மீதி பணம் மற்றும் வேறு சில ஆவணங்கள் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் விரிவாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்தலாமா என ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்