Skip to main content

முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு..! 

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

Case filed against former minister's aide ..!

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகரின் முன்னாள் நகர்மன்ற து.தலைவர், அ.தி.மு.க.வின் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற து.செ. உள்ளிட்ட பதவிகளை வகித்த முக்கியப் புள்ளி கண்ணன். சங்கரன்கோவில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான ராஜலட்சுமியின் அரசியல் ஆலோசகராகவும் இருப்பவர். நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் ராஜலட்சுமி 5354 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். 

 

கடந்த 10ம் தேதி அன்று சங்கரன்கோவில் நகரின் ராமசாமியாபுரம் தெருவில் குடிநீர் சரியாக வரவில்லை என அங்குள்ள மக்கள் நகராட்சிக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அதையடுத்து நகராட்சிப் பணியாளர்கள் தண்ணீர் செல்கிற வால்வை சரிசெய்து கொண்டிருந்தார்கள். இந்தத் தகவல் கண்ணனுக்கும் போக, அவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் அங்கு வந்திருக்கிறார். அப்போது, அந்த தெருவில் ரோடு வசதி செய்து தரப்படவில்லை எனக்கூறி ஆர்ப்பாட்டத்திற்காக அங்குள்ளவர்களைத் திரட்ட அவர் முற்பட்டதாகத் சொல்லப்படுகிறது. அதற்கு மக்கள் வரவில்லை என தெரிகிறது.

 

இந்த நிலையில் தகவலறிந்த மற்றொரு தரப்பினர் அங்கே திரண்டு வந்திருக்கின்றனர். அவர்களோடு கண்ணன் பேசிக் கொண்டிருந்தபோது, இரண்டு தரப்பினருக்கிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு தரப்பிலும் வார்த்தைகள் முற்றி விவகாரமாகியிருக்கிறது. பதற்றச் சூழல் ஏற்படுவதைக் கண்ட கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அதே நேரத்தில் தி.மு.க.வின் நகரச் செயலாளரான சங்கரனும் ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்.

 

மக்கள் நடந்தது குறித்துக் கண்ணன் மீது நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, நகர தி.மு.க.வின் செயலர் சங்கரனும் கண்ணன் மீது புகார் செய்திருக்கிறார்.

 

இதனடிப்படையில் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

 

இதுகுறித்து நாம் கண்ணனை அலைபேசியில் தெடர்புகொண்ட போது, “நான் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். அப்போது ராமசாமியாபுரம் பகுதியில் குடிதண்ணீர் வரவில்லை என்று தெரிவித்தார்கள். அதை நான் சரிசெய்யும் பொருட்டு நகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டேன். அவர்களும் வந்து அதை சரிசெய்து கொண்டிருந்தனர். அதற்குள் கூட்டம் திரண்டுவிட்டது. அதுசமயம் நான் தகராறு செய்யவில்லை, யாரையும் அவதூறாகவும் பேசவுமில்லை” என்றார்.

 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.