
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா. அவர் தனது டாடா இண்டிகா விஸ்டா காரில் தனது கணவர் பிஜு பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோவை வந்துள்ளார். காரை கணவர் பிஜூ பாலகிருஷ்ணன் ஓட்டிய நிலையில் கோவை பொள்ளாச்சி சாலை ஆத்துப்பாலத்திருந்து டவுன்ஹால் நோக்கி சென்ற போது காரின் என்ஜின் பகுதியிலிருந்து திடீரென தீப்பற்றியுள்ளது.
இதனை சற்றும் எதிர்பாராத பிஜூ பாலகிருஷ்ணன் உடனடியாக காரை நிறுத்தியதுடன் காரிலிருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் இறக்கி விட்டார். அதே நேரத்தில் காரில் பரவிய தீ காரணமாக காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து உக்கடம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.