Skip to main content

“ராகுலை கண்டு அஞ்சிய மத்திய அரசு” - அசோக் கெலாட் விளாசல்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

ashok gehlot talks about mansukh mandaviya letter issue

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். கடந்த செப்.7 ஆம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமைக்கான நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல் காந்தி, சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் பாத யாத்திரையின் 100 வது நாளை நிறைவு செய்தார்.

 

இந்நிலையில், ராகுல் காந்திக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்க்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற இயலாவிட்டால் இந்திய ஒற்றுமை யாத்திரையை பொதுநலன் கருதி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

 

இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "ராகுல் காந்தியின் ஒற்றுமை பயண யாத்திரைக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதை கண்டு பாஜக பயந்து விட்டது. இந்த யாத்திரையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். மத்திய அமைச்சர்கள் இப்படி கடிதம் எழுதுவது மத்திய அரசு மிகவும் பயந்து விட்டது என்பதைக் காட்டுகிறது. எங்கள் யாத்திரை தொடர்ந்து நடைபெற்று கொண்டுள்ளது. இந்த ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இவ்வாறு கடிதம் எழுதுகிறார். நாட்டில் இந்திய ஒற்றுமை பயணத்தின் தாக்கம் மக்களிடத்தில் உள்ளதால் பாஜகவே கலக்கத்தில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜே.பி.நட்டாவின் ஆக்ரோஷ் பேரணி கடுமையான தோல்வியை சந்தித்தது. திரிபுராவில் பிரதமர் மோடி நடத்திய பேரணியில் கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றவில்லை" என்றார்.

 

இதேபோன்று காங்கிரஸ் கட்சியின்  மற்றொரு மூத்த தலைவரான பவன் கெரா செய்தியாளர்களிடம் பேசும் போது, "ராகுல் காந்திக்கு மட்டும் மத்திய அரசு இவ்வாறு கடிதம் எழுதுவது ஏன்?. ராஜஸ்தானில் பாஜக தலைவர் சதீஷ் பூனியா மேற்கொண்டு வரும் மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை நிறுத்த சொல்லி கடிதம் அனுப்பப்பட்டதா? நாட்டில் எங்குமே கொரோனா விதிகள் அமலில் இல்லை. முதலில் விதிகளை அறிவியுங்கள். பிறகு நாங்கள் அதை பின்பற்றுகிறோம்" என மத்திய அரசுக்கு எதிராக தனது கேள்விகளை எழுப்பி உள்ளார். ராகுல்காந்திக்கு  ஆதரவாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்