Skip to main content

'மீண்டும் ஒரு தற்கொலை?; நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்?'-எடப்பாடி ஆவேசம்

Published on 17/08/2024 | Edited on 17/08/2024
eps

தஞ்சாவூரில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

நீட் ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும் திமுக முதல்வர், தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெற்று விளம்பரப் பேச்சுகளை நம்பி ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை உணர வேண்டும். 40 எம்பிக்களை வைத்து நாடாளுமன்றத்தில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

nn

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? இன்னும் எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்? நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் திமுக அரசுக்கு கடும் கண்டனம். இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

மாணவச் செல்வங்களே- உயிர் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனைக் கற்களாக மாற்றப் பாருங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கென்ற ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்