Skip to main content

“2 கிலோ இறைச்சி; ரூ.5000 பணம்” - தேர்தல் ஆணையத்தை நாடும் பாஜக

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

“2 kg of meat; Rs.5000 money”- BJP seeks Election Commission

 

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தைப் பாதிக்கும் வகையில் திமுகவினர் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரின் திடீர் மறைவையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 22 மாதங்களாக திமுக ஆட்சியில் இருந்தும் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. அதனால், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக பணத்தின் மீதே நம்பிக்கை வைத்துள்ளது. 

 

திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் வாக்குக்கு பணம் விநியோகிக்கும் முறைகள், விநியோக மையங்கள் மற்றும் பணம் விநியோகம் செய்வதற்கான காலக்கெடு குறித்து விவாதித்த ஆடியோவை 29 ஜனவரி 2023 அன்று வெளியிட்டோம். இந்த ஆடியோ பற்றி மாநில தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பித்ததுடன், திமுகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். பிப்ரவரி 11, 2023 அன்று, ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், திருப்பூர் மாவட்டம், திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் சர்புதீனின் காரில் இருந்த டோக்கன்களை தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

கடந்த வார இறுதியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 கிலோ இறைச்சியை லஞ்சமாக வழங்கினர். அங்குள்ள வாக்காளர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை வழங்க திமுக அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தைப் பாதிக்கும் வகையில் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

 

தமிழ்நாடு பாஜக அளித்த புகாரின் மீது மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் திமுக அரசின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் செய்யவில்லை. ஈரோடு கிழக்கில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்