Skip to main content

மல்யுத்த வீரர் முதல் முதலமைச்சர் பதவி வரை... முலாயம் சிங் யாதவின் வரலாறு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

From wrestler to Chief Minister... History of Mulayam Singh Yadav!

 

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82) உடல் நலக்குறைவால் ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (10/10/2022) காலை 08.16 மணிக்கு காலமானார். 

 

உத்தரபிரதேச மாநில முதலமைச்சராகப் பதவி வகித்துள்ள முலாயம் சிங் யாதவ், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 1989 முதல் 1991, 1993 முதல் 1995, 2003 முதல் 2007 ஆகிய ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக இருந்த முலாயம் சிங் யாதவ், பிரதமராக தேவ கவுடா, ஐ.கே.குஜரால் ஆகியோர் இருந்த போது, அவர்களது அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர். 

 

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தவிர்க்கவே முடியாத, அரசியல் சக்தியாக, தலைவராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். அந்த மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவர் அவர். அடிப்படையில் முலாயம் சிங் யாதவ் மல்யுத்தக்காரர். அரசியலில் களம் இறஙகிய பிறகு, உத்தரபிரதேசத்தில் வி.பி.சிங் மற்றும் சந்திரசேகருடன் வெவ்வேறு காலக்கட்டத்தில் இணைந்து செயல்பட்டார். 

 

இவரது பலமே யாதவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி தான். அரசியலில் திடமான கொள்கையை உடைய முலாயம் சிங் யாதவ், பல தருணங்களிலும் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்தவர். அவரது நிலைப்பாடு எப்போதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானதாகவே இருந்துள்ளது. கடந்த 1992- ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியை நிறுவினார். அந்த காலகட்டத்தில் தான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 

 

இந்த சம்பவத்தை அடுத்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, கடுமையாக போராடினார் முலாயம் சிங். இதற்காக, காங்கிரஸ், ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் 1989- ஆம் ஆண்டில் முதன்முறையாக சமாஜ்வாதி கட்சியில் அரியணையில் ஏற்றினார். 

 

மத்தியில் 1996- ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்த போது, முலாயம் சிங்கின் சமாஜ்வாதியும் ஓர் அங்கமாக இருந்தது. அப்போது, பாதுகாப்புத்துறை அமைச்சரானார் முலாயம் சிங் யாதவ். இந்த பொறுப்பில், அவர் சிறந்த நிர்வாகி என்ற பெயரையும் பெற்றார். தேசிய அளவில் தன்னை உயர்த்திக் கொள்ள அமர்சிங் மூலம், அமிதாப் பச்சன், ஜெயபிரதா ஆகிய திரை நட்சத்திரங்களை கட்சியில் இணைத்தார். இவர்களுக்கு பதவிகளையும் வாரி வழங்கினார். இதனால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. 

 

தொடக்கத்தில் இருந்தே முலாயமுடன் இணைந்திருந்த ஆசம்கான் போன்ற தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறினர். பிறகு அமர்சிங்க்கும், திரைப்பட நட்சத்திரங்களும் கட்சியில் இருந்து வெளியேறினர். முலாயமை விட்டு பிரிந்த தலைவர்கள் ஒரு கட்டத்தில் மீண்டும் கட்சியில் இணைந்தனர். 

 

2012- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. அப்போது, தான் நான்காவது முறையாக முதலமைச்சராகாமல், 38 வயதே ஆன தனது மகன் அகிலேஷ் யாதவை அரியணை ஏற்றினார்.  2016- ஆம் ஆண்டு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷுக்கும், தம்பி சிவ்பால் யாதவிற்கும் மூண்ட மோதலில் சமாஜ்வாதி கட்சிக்குள் பூகம்பம் வெடித்தது. சிவ்பால் யாதவ் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சித் தொடங்கினார். 

 

தான் உருவாக்கிய சமாஜ்வாதி கட்சியில் இருந்து தனது மகன் அகிலேஷ் யாதவால் வெளியேற்றப்பட்டார் முலாயம் சிங் யாதவ். இந்த உட்கட்சி பூசலால் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார் முலாயம் சிங் யாதவ். தேசிய அரசியலிலும் முத்திரைப் பதித்த முலாயம் சிங் யாதவ், உத்தரபிரதேச மாநில மணிப்பூர்  தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.

Next Story

காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு; மனம் மாறிய அகிலேஷ் யாதவ்?

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Akhilesh Yadav changed his mind for Congress - Samajwadi constituency distribution

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்தது. அதே போல், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்க முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணிகள் சார்பில் நடந்த தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது மேலும், சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், சந்திரசேகர் ஆசாத் கட்சி ஒரு இடத்திலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க செய்த தில்லுமுல்லு போல் இதுவரை யாரும் செய்தது இல்லை. பா.ஜ.க செய்த தில்லுமுல்லு செயல்களை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க துடைத்தெறியப்படும்” என்று கூறினார்.