Skip to main content

கோவாக்சினுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுப்பது எப்போது? - உலக சுகாதார நிறுவன அதிகாரி தகவல்!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

COVAXIN

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதன்பிறகு, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது குறித்து நான்கு முதல் ஆறு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் எப்போது அவசரகால அனுமதி அளிக்கும் என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் "தடுப்பூசி ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், ஜூலை 9ஆம் தேதி சமர்ப்பித்துவிட்டது. மற்ற கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க உலக சுகாதார நிறுவனம் எடுத்துக்கொண்ட நேரத்தின் அடிப்படையில் பார்த்தால், அவசரகால அனுமதிக்கான நடைமுறை முடிவடைய, தரவுகள் சமர்ப்பிக்கப்பட்ட  நாளிலிருந்து இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது" என தெரிவித்தார்.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் என தெரியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கான உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் மரியங்கேலா சிமாவோ, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் செப்டம்பர் மாதத்தின் இடைப்பகுதியில் முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்