
ஊரடங்கின் எதிரொலியாக இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உணவு சாப்பிடுகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் 25 முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த தேசமும் முடங்கிப்போயுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கிராமங்களை சேர்ந்த பணமில்லாத மக்கள், பாதி உணவு மட்டுமே உண்பதாக தெரிய வந்துள்ளது. ஏப்ரல் 28 முதல் மே 2 வரை பர்தான் என்ற அமைப்பு மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், பீகார், அசாம் மற்றும் கர்நாடகா ஆகிய 12 மாநிலங்களில் உள்ள கிராமங்களில் ஊரடங்கு குறித்து ஆய்வு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், கிராமப்பகுதிகளில் வசிக்கும் பாதி பேர் 50 சதவீதத்திற்கும் குறைவான உணவுப் பொருட்களை மட்டுமே உண்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த இக்கட்டான சூழலை சமாளிப்பதற்காக பெரும்பாலும் பெண்கள் குறைந்த வேளை சாப்பிடுவதும் தெரிய வந்துள்ளது. மேலும், 24 சதவீத குடும்பங்கள் உணவு தானியங்களை கடன் வாங்கியுள்ளதும், 68 சதவீத குடும்பங்கள், தங்கள் உணவில் உணவுப் பொருட்களை குறைத்துக்கொண்டதும், 50 சதவீத குடும்பங்கள் ஒரு நாளில் சாப்பிடும் அளவை குறைத்துக்கொண்டதும் தெரியவந்துள்ளது.