Skip to main content

"விவசாயிகளின் உயிர் தியாகத்தை தொடர்ந்து அவமதிக்கிறீர்கள்" - மத்திய அரசுக்கு விவசாய கூட்டமைப்பு கண்டனம்!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

farmers

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒருவருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார். அதன்படி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. அதனைத்தொடர்ந்து நேற்று (01.12.2021) குடியரசுத் தலைவர் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் அதிகாரபூர்வமாக நேற்று மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

இருப்பினும் குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் பற்றிய தரவுகள் குறித்தும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "வேளாண் அமைச்சகத்திடம் இந்த விவகாரத்தில் (விவசாயிகள் இறப்பு) எந்தப் பதிவும் இல்லை. எனவே (இழப்பீடு வழங்குவது குறித்து) கேள்வி எழவில்லை" என தெரிவித்தார்.

 

இதற்கு விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திவரும் விவசாய சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கண்டனம் தெரிவித்துள்ளது. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளைப் பற்றிய தரவுகள் இல்லை என கூறுவதன் மூலம் மத்திய அரசு விவசாயிகளின் உயிர்த் தியாகத்தை தொடர்ந்து அவமதித்துவருவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

மேலும், விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், மறுவாழ்வுக்கான வழிவகையும் செய்து தரப்படாவிட்டால், டெல்லி எல்லையில் போராட்டம் தொடரும் என்றும், இந்தப் போராட்டங்களில் அதிக ட்ராக்டர்கள் பங்கேற்கும் எனவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா எச்சரித்துள்ளது.

 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த பிரதமர் மோடி, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவகாரங்களை ஆராய விஞ்ஞானிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதன்தொடர்ச்சியாக இந்தக் குழுவில் சேர்க்க விவசாயிகளின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய அரசு சம்யுக்தா கிசான் மோர்ச்சாவைக் கேட்டுக்கொண்டது.

 

இந்தநிலையில், விவசாயிகளைக் குழுவில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்காதவரை, குழுவில் இணைக்க விவசாயிகளின் பெயர்களைப் பரிந்துரைக்கப்போவதில்லை எனவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு, (குழுவிற்காக) அனுப்ப வேண்டிய விவசாய தலைவர்களின் பெயர்களை நாங்கள் முடிவுசெய்துவிட்டோம். ஆனால், இன்றுவரை அரசாங்கம் எழுத்துப்பூர்வ தகவல் அனுப்பவில்லை. இந்தக் குழு எதைப் பற்றியது, அதன் உரிமை என்ன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அத்தகைய விவரங்கள் இல்லாத நிலையில் நாம் மேற்கொண்டு எதையும் செய்ய முடியாது" என கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.