Skip to main content

ஆற்றில் விடப்பட்ட ரெம்டெசிவிர் மருந்துகள்.. போலிகளால் உயிர்போகும் அபாயம்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

corona

 

கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து மிகவும் தேவை என்று செய்தி பரவியதால் அதற்காக மருந்துக் கடைகளில் படையெடுக்கத் தொடங்கினார்கள் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். இந்தப் படையெடுப்பை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிரை பலர் கள்ளச்சந்தையில் விற்றுக் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.

 

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி போலி ரெம்டெசிவிர் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்தும் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் பல கோடி மதிப்புள்ள போலி ரெம்டெசிவர் மருந்து குப்பிகளையும், அதில் அடைத்திருந்த குளுக்கோஸ் பாட்டில்களையும், ரூ.90 லட்சம் வரை பணத்தையும் கைப்பற்றி 7 பேரை கைதும் செய்தனர். இப்படி மனித உயிர்களோடு விளையாடும் விஷமிகள் புற்றீசலாக ஆங்காங்கே முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

corona

 

இந்நிலையில் நேற்று முன்தினம் பஞ்சாப் பாக்ரா நதியில் ஓடும் தண்ணீரில் ஆயிரக்கணக்கான ரெம்டெசிவர் மருந்து பாக்கெட்டுகள் மிதந்து சென்றதை அப்பகுதி இளைஞர்கள் எடுத்துப் பார்த்து ஆதங்கப்பட்டுள்ளனர். அவை போலியா அல்லது உண்மையான ரெம்டெசிவிரா என்ற சந்தேகத்துடன் எடுத்த நிலையில், மருந்துகள் நல்ல தண்ணீரில் கலப்பதால் தண்ணீர் கெட்டுப் போகும் என்று பேசிக்கொண்டே அந்த மருந்துப் பெட்டியை திறந்து பார்க்கிறார்கள். அந்தப் பெட்டியில் "ஃபார் யூஸ் இன் இண்டியா நாட் ஃபார் எக்ஸ்போர்ட்" என்று அச்சிடப்பட்டிருந்தது. இவை அனைத்தும் போலி மருந்துகள் என்பதால் ஆற்றில் விட்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. போலி மருந்து தயாரிப்பவர்களை அடியோடு ஒழிக்கவில்லை என்றால் பல ஆயிரம் உயிர்கள் இதனால் போவதை தடுக்க முடியாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் சுஷில் குமார் ரிங்கு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மற்றும் அம்மாநில எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் இன்று (27.03.2024) தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து சுஷில் குமார் ரிங்கு கூறுகையில், “ஜலந்தரின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஜலந்தரை முன்னோக்கி கொண்டு செல்வோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஜலந்தருக்கு கொண்டு செல்வோம். ஜலந்தர் மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மைதான், ஏனெனில் எனது கட்சி (ஆம் ஆத்மி) எனக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.

Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் ஷீத்தல் அங்குரல்

மேலும் பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்குரல் கூறுகையில், “இப்போது அவர்களை (ஆம் ஆத்மியை) அம்பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பஞ்சாப் மக்களிடம் ஆம் ஆத்மி பொய் கூறியுள்ளது. ஆபரேஷன் தாமரை தொடர்பான ஆதாரங்களை விரைவில் கொண்டு வருவேன்” எனத் தெரிவித்தார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

Next Story

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
A freight train ran without a driver

ஜம்மு - காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களின் பணி மாற்றத்திற்காக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலை எஞ்சினை இயக்கத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற ரயில் 5 ரயில் நிலையங்களைக் கடந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கி வேகமாக சென்றுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் சரக்கு ரயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் எஞ்சினில் கை பிரேக்கை இழுக்க மறந்து ஓட்டுநர்கள் இறங்கிச் சென்றதாலும், தண்டவாளம் சரிவு காரணமாக ரயில் தானாகப் புறப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதே சமயம் லந்தர் - பதான்கோட் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து கிராசிங்குகளும் உடனடியாக மூடப்பட்டன. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஜம்மு கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.