Skip to main content

2024 நாடாளுமன்ற தேர்தல்; உ.பியில் திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிடும் - மம்தா பானர்ஜி அதிரடி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

MAMATA BANERJEE

 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவே தங்களின் முக்கிய எதிரி எனth தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது; 2024-ல் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதால், கட்சியை வலுப்படுத்துமாறு கட்சித் தொண்டர்களையும், தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். 34 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியை மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்ற முடியுமென்றால், நிச்சயம் பாஜகவையும் நாட்டிலிருந்து அகற்ற முடியும். அவர்கள் நமது முக்கிய எதிரிகள்.

 

மேகாலயா மற்றும் சண்டிகரில் பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பாஜகவுக்கு எதிரான அனைத்து கூட்டங்களும் ஒன்று சேர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யாராவது வேறுவிதமாக நினைத்துக்கொண்டு, கர்வத்துடன் இருந்தால், நம் நமது பாதையைத் தேர்ந்தெடுக்கவேண்டியதுதான். பாஜகவை தோற்கடிக்க பிராந்திய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

 

உத்தரபிரதேசத்தில் இருந்து காங்கிரசும், குஜராத்தில் இருந்து பாஜகவும் தேசிய கட்சியாக உருவெடுத்தது போல், மேற்கு வங்கத்தில் இருந்து  திரிணாமூல் காங்கிரஸ் தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, ஆனால் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை ஆதரிக்கப் போகிறேன். 2024 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து போட்டியிடுவோம். கோவாவில் நமது கட்சியை உருவாக்கியுள்ளேன், திரிபுராவில் நமது வாக்கு சதவீதம் 20%க்கு மேல் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் வங்கத்தை வலிமையாக்க வேண்டும், அதன்மூலம்(2024 மக்களவைத் தேர்தலில்)  42 இடங்களையும் பெறுவோம். பாஜகவை விரட்டியடிக்க வேண்டும்.

 

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலளித்த திரிணாமூல் காங்கிரஸ், "2024-ல் பாதுகாப்பான தொகுதியை பார்த்துக்கொள்ளுங்கள். வாரணாசியில் உங்களுக்கு சவாலளிக்கப்படும்" தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இது மம்தா, மோடியை எதிர்த்து களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பை கிளப்பியது. அதேபோல் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்னொரு தொகுதியிலிருந்து போட்டியா?" என பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை தாக்கியுள்ளார். ஆமாம் பிரதமரே. இன்னொரு தொகுதியிலிருந்து போட்டியிடுவார். அது வாரணாசி. எனவே உங்கள் கவசத்தை தயார்செய்து கொள்ளுங்கள்" எனக் கூறினார்.

 

இது எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில், "2024 தேர்தலுக்கான கவுன்டவுன் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வாரணாசியில் மோடி கடுமையான சவாலை எதிர்கொள்வார். வாரணாசியில் மோடிக்கு எதிராக மம்தா களமிறங்குவாரா என்பது குறித்து கட்சியும், கட்சித் தலைவரும் பின்னர் முடிவெடுப்பர்" என திரிணாமூல் கட்சியின் செய்தித்தொடர்பாளர் எதிர்பார்ப்புகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார். இந்தசூழலில் மம்தா திரிணாமூல் காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்திலிருந்து போட்டியிடும் என அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்