Skip to main content

“நரேந்திர மோடியின் நன்கொடை வியாபாரம் அம்பலமாகப் போகிறது” - ராகுல் காந்தி தாக்கு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rahul Gandhi said Narendra Modi's donation business is getting exposed

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்.15 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், ‘தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோதம் ஆகும். எனவே, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களையும் வெளியிட உத்தரவிடப்படுகிறது. தேர்தல் பத்திரங்களை வழங்குவதை, எஸ்.பி.ஐ வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும்’ என கூறப்பட்டது.

மேலும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என தீர்ப்பளித்த நீதிமன்றம், வரும் மார்ச் 6ஆம் தேதிக்குள் நன்கொடை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், அதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணையப்பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.

இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற அந்த வழக்கின் விசாரணையில் எஸ்.பி.ஐ வங்கிக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் வைத்துள்ளது. '24க்கும் குறைவான அரசியல் கட்சிகளே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன.  மிக சுலபமாக சேகரிக்கக் கூடிய தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட எஸ்பிஐ அவகாசம் கேட்பது ஏன்? மிக எளிமையான உத்தரவை பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது?.  26 நாட்கள் ஆகிறது இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எஸ்பி வங்கியால் செய்ய முடியாத வேலையை எதுவும் நாங்கள் கொடுக்கவில்லை. எஸ்பிஐ வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என  தெரிவித்த நீதிமன்றம், நாளை மாலைக்குள் விவரங்களை எஸ்.பி.ஐ வெளியிடவும், மார்ச் 15 ஆம் தேதிக்குள்  எஸ்பிஐ  வங்கியிடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை பெற்று வெளியிட தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நரேந்திர மோடியின் ‘நன்கொடை வியாபாரம்’ அம்பலமாக போகிறது. சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை 100 நாட்களில் மீட்டுத் தருவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, சொந்த வங்கியின் விவரங்களை மறைத்ததற்காக உச்ச நீதிமன்றத்தில் தலைகுனிந்து நின்றது. நரேந்திர மோடியின் உண்மையான முகத்தை நாட்டின் முன் வெளிப்படுத்தும் தேர்தல் பத்திரங்கள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலாக நிரூபிக்கப் போகிறது” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்